அதிரடி ரெய்டில் சிக்கிய உணவகங்கள் ! குப்பைக்கு போன இறைச்சிகள் ! கடைக்கு சீல் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செப்-04 அன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், உப்பத்தூர் பிரிவு அருகே உள்ள திருப்பதி டீ ஸ்டாலில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டதால் கடை உடனடியாக மூடி சீலிடப்பட்டது.
அதேபோல் அருகிலிருந்த பிரபல சிமெண்ட் தொழிற்சாலையின் கேண்டீன்களில் 2 கிலோ கலர் அப்பளம் மற்றும் 125 கிலோ லேபிள் விபரமற்ற நாட்டுச் சக்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத காரணத்தால் இரண்டு கேண்டீன்களும் மூடப்பட்டன.
சாத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல உணவகத்தில் உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படாத 24 கிலோ சிக்கன், 1 கிலோ பழைய சப்பாத்தி மாவு மற்றும் அரைக் கிலோ சப்பாத்தி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
இவற்றைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
உணவக உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுதல், லேபிள் விபரங்களுடன் உள்ள பொருட்களை மட்டும் கொள்முதல் செய்தல், சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் உணவுப் பொருட்களில் குறைபாடு குறித்து புகார் அளிக்க விரும்பினால் மாநில வாட்ஸ்அப் எண் 94440 42322 –அல்லது https://foodsafety.tn.gov.in இணையதளத்திலோ அல்லது TN Food Safety செயலி மூலமாகவும் புகார் செய்யலாம். புகார் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.