எங்க ஊருக்கு இதுவரை எந்த கலெக்டரும் வந்ததே இல்லை, ஆனா இப்போ … ?
பொதுப் பிரச்னைகள் தொடர்பாக எந்த நேரத்திலும் மக்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம். பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். அரசு அறிவிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பதவியேற்ற நாளில் திருப்பத்தூர் மாவட்ட மக்களிடம் ஆச்சர்யப்படுத்தினார் இம்மாவட்டத்தின் முதல் பெண் “கலெக்டரான சிவ. சௌந்திரவள்ளி.
சிவ. சௌந்திரவள்ளி
அவை, வெறும் வார்த்தைகளோடு மட்டும் நிற்காமல், அவற்றை தினம்தோறும் நேரடியாகச் செயல்படுத்தியும் வருகிறார். சாலைகளில் ஆய்வு, அரசு மருத்துவமனைக்குத் திடீர் விசிட், குறைதீர்க்கும் கூட்டம், நாள்தோறும் முகாம் சுய உதவிக் குழு பெண்களுக்கு உடனடி கடன் வழங்குதல் எனப் பரபரப்பாக இயங்கியும் வருகிறார்.
இந்த நிலையில் தான் பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து காத்துகிடந்த ஒரு கிராமத்திற்கு திடீரென கள ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட “கரிமாபாத்’ என்ற பகுதியில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1500 – க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், கழிவுநீர் கால்வாய், சாலை வசதிகள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால் இவை அனைத்தும் ஏற்படுத்தி தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து சலித்து போனார்கள் என்றே சொல்லலாம்.
இப்பகுதியில் உங்கள் ஊரில் உங்கள் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் மேற்குறிப்பிட்ட கோரிக்களாக வந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் சிவ. சௌந்திரவள்ளி கரிமாபாத் பகுதிக்கு நேரடி விசிட் அடித்தார்.
அவரது ஆய்வுக்கு பின், இப்பகுதி மக்கள் வரி கட்டுகிறார்கள் இல்லையா? வரி வாங்கினால் அவர்களுக்கு போதிய அடிப்படை வசதி செய்து தர வேண்டும்தானே ? இந்த 4 ஆண்டுகளாக என்ன வேலை செய்துள்ளீர்கள்? இப்பகுதியை தூய்மையாக வைத்திருந்தால் தான் நோய் தொற்றுகள் பரவாது. அவற்றை தடுப்பது நமது கடமை இல்லையா? அதிலும் டெவலப் ஆன வார்டுகளிலே பணி செய்து உள்ளீர்கள்? ஏன் குறிப்பிட்ட வார்டுகளில் பணி செய்ய முன்வரவில்லை? என பொதுமக்கள் முன்பே, ஊராட்சி பணியாளர்களை நிற்க வைத்து லெஃப்ட் அண்டு ரெட் வாங்கினார்.
அதன்பிறகு, நாளை முதல் இப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் 12 பேரும் தெருவுக்கு ஒருவர் இருக்க வேண்டும். தினமும் குப்பைகளை அப்புறப்படுத்தி முறையான குடிநீர் வழங்க வேண்டும். சாலைகளை நாள்தோறும் சுத்தம் செய்து அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து எனக்கு அனுப்பி வைக்கனும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், அங்கு கூடியிருந்த அப்பகுதி மக்களிடம், “முறையான சாலை வசதி மற்றும் கழிவு நீர் கால்வாயை , அடுத்த 90 நாட்களுக்குள் அமைத்து தருவதாக வாக்குறுதியளித்துவிட்டு சென்றார்.
“கரிமாபாத் பகுதிக்கு” இதுவரை எந்த கலெக்டரும் வந்ததில்லை எனவும் இந்த ஆட்சியர் வந்ததால், நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
— மணிகண்டன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.