ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சையில் நடைபெற்ற கம்பன் பெருவிழா !
தஞ்சாவூரில் கம்பன் கழகம் 1988-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டு தோறும் கம்பன் பெருவிழாவை நடத்தி வந்தார்கள். கம்பன் கழகத்தை துவக்கிய புலவர் ஆ.பசுபதி மறைவையடுத்து, கழகத்தின் பொறுப்பை ஏற்று முன்னாள் அமைச்சர் சி.கா.மி. உபயதுல்லா திறம்பட நடத்தியும் வந்தார்.
இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டில் சி.கா.மி. உபயதுல்லா மறைவிற்குப் பிறகு 7 ஆண்டுகள் கம்பன் பெருவிழா தஞ்சையில் நடைபெறாமலேயே இருந்தது. இதற்கு பெரு முயற்சி எடுத்து, தஞ்சை கவிஞர் இனியன், இராம.சந்திரசேகரன் போன்றவர்கள் , முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கதின் சகோதரரும் வழக்கறிஞருமான எஸ்.எஸ்.ராஜ்குமாரை அணுகினர். அவரது ஒத்துழைப்புடன், கடந்த செப்-20 அன்று தஞ்சை – பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் இந்த ஆண்டு கம்பன் பெருவிழாவை நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.
ஏழாண்டுகளுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இவ்விழாவுக்கு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைப்பித்தன் தலைமை தாங்கினார்.
கம்பன் கொடுத்த கடன்கள் – வல்லம் தாஜ்பால்; தசரதனின் பெற்ற கடன் – கவிஞர் ராகவ் மகேஷ்; இராமன் செய்த நீர்க்கடன் – கவிஞர் திருமதி மைதி தயாளன்; சுக்ரீவனின் நன்றிக்கடன் – கவிஞர் வி.ம.இளங்கோவன்; கும்பகர்ணனின் செஞ்சோற்றுக்கடன் – கவிஞர் தஞ்சை இனியன் ஆகிய தலைப்புகளில் கவிதை பாடினர்.
எஸ்.எஸ்.ராஜ்குமார் வரவேற்புரை நிகழ்த்த, இலக்கிய மாமணி இரா.கலியபெருமாள், இரா.பூமிநாதன், புலவர் பா.கந்தசாமி, புலவர் மா.கோபாலகிருட்டினன், சா.கோவிந்தராசன் ஆகியோர் முன்னிலை வகிக்க, இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் கம்பன் கொடுத்த கொடை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். செ.சந்திர சோதி நிகழ்வை தொகுத்து வழங்கினார். பிரபு ராமூர்த்தி நன்றியுரையோடு கூட்டம் நிறைவடைந்தது.
— தஞ்சை க.நடராசன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.