குழந்தை திருமணம் … கர்ப்பமான சிறுமி … இலஞ்சம் கேட்டு கைதான பெண் இன்ஸ்பெக்டர் !
குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் மற்றும் மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனக்கு 50 ஆயிரம் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் போலீசு இன்ஸ்பெக்டர் ஒருவர் இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தருமபுரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தும்பலஹள்ளியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலக்கோட்டைச் சேர்ந்த மணி என்பவர் காதலித்து, கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில். கர்ப்பமான சிறுமி, அருகிலுள்ள அரசு மருத்துவ பரிசோதனைக்காக சென்றபோது, அவர் மைனர் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பாலக்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் சிறுமியின் பெற்றோரை அழைத்து விசாரித்திருக்கிறார்.

“குழந்தை திருமணம் செய்து வைத்து இருக்கிறீர்கள். உங்களை குடும்பத்தோடு ஜெயிலில் போட வேண்டியிருக்கும். இந்த விவகாரம் தொடர்பாக, கைது ஏதும் செய்யாமல் இருக்க வேண்டுமெனில், 50 ஆயிரம் இலஞ்சமாக கொடுங்கள்” என கேட்டிருக்கிறார்.
இலஞ்சம் கொடுக்கும் அளவுக்கு வசதியில்லாத சிறுமியின் பெற்றோர்கள், தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்திருக்கிறார்கள்.
துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையிலான, இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்து காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் வீரம்மாளிடம் கொடுக்க சொல்லி அனுப்பி வைத்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக இன்ஸ்பெக்டர் வீரம்மாளை கைது செய்தனர்.
முன்னதாக, ஏப்ரல் 29/ 2025 அன்று பாலக்கோடு கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் ராமசந்திரன லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
மே 26/2025 அன்று குற்றவாளியை ஜாமீனில் விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாலக்கோடு தலைமை காவலர் சுரேஷ் கையும் களவுமாக சிக்கியிருந்தார்.
கடந்த மூன்று மாதங்களில் பாலக்கோடு கருவூல அலுவலர், காவல் நிலைய தலைமை காவலர், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் என அடுத்தடுத்து இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் தருமபுரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
— மணிகண்டன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.