பேருந்தில் தவறவிட்ட தாலி .. பத்திரமாக மீட்டுக் கொடுத்த சட்டக்கல்லூரி மாணவிகள் !
துறையூர் பேருந்தில் கேட்பாரற்று தாலி மற்றும் பணத்துடன் இருந்த இருந்த மணிப்பர்ஸை எடுத்து போலீஸில் ஒப்படைத்த இரண்டு சட்டக்கல்லூரி மாணவிகளை பொதுமக்கள் பாராட்டினர். துறையூர் அருகே கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகள் விந்தியா(23). அவரது தோழி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் அருகே நக்கசேலம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவேலுசாமி மகள் பிரீத்தா(25). இவர்கள் இருவரும் திருச்சி சட்டக் கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று மாலை திருச்சியிலிருந்து துறையூர் நோக்கி வந்த தனியார் பேருந்தில் பயணித்தனர். துறையூர் பேருந்து நிலையத்தில் இருவரும் இறங்கும் போது பேருந்துக்குள் கேட்பாரற்று கிடந்த மணிப்பர்சை கண்டு அதை எடுத்து பார்த்தனர். அப்போது அதில் தாலியும், ரூ. 150 ரொக்கப்பணமும் இருந்தது. உடனே பேருந்து ஊழியர்களிடம் கூறிவிட்டு அந்த மணிப்பர்சை அப்படியே கொண்டு சென்று துறையூர் போலீஸில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே சட்டக் கல்லூரி மாணவிகள் பயணித்த அதே பேருந்தில் புலிவலம் வரை பயணித்து மணிப்பர்சை தவறவிட்ட புலிவலம் ராமமூர்த்தியின் மனைவி முத்துலட்சுமி(56) பேருந்து நடத்துனரின் கைபேசியில் தொடர்பு கொண்டு காணாமல் போன மணிப்பர்சை விசாரித்த போது அவர் மணிப்பர்சை எடுத்த சட்டக் கல்லூரி மாணவிகள் துறையூர் போலீஸில் ஒப்படைப்பதாக கூறிச் சென்றதை தெரிவித்தார்.
உடனே முத்துலட்சுமி துறையூர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்ற முத்துலட்சுமி தனது மருமகள் ஜீவிதாவுக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளதாகவும், மகப்பேறு நடந்த சமயத்தில் தாலியை கழட்டி கொடுத்ததால் அதனை தனது மணிப்பர்ஸில் வைத்திருந்ததாகவும், அப்படியே ஊருக்கு வரும் போது கையிலிருந்த பையில் மணிப்பர்சை வைத்திருந்த போது அது பேருந்துக்குள் தவறி விழுந்து விட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து துறையூர் போலீஸார் மணிப்பர்சை எடுத்து வந்த சட்ட கல்லூரி மாணவிகள் இருவரையும் அதன் உரிமையாளரான முத்துலட்சுமியிடம் நேரில் கொடுக்கச் செய்து மாணவிகளின் செயலைக் கவுரவப்படுத்தினர். முத்துலட்சுமி மாணவிகளுக்கு நன்றி கூறினார். இதையறிந்த பொதுமக்களும் சட்டக்கல்லூரி மாணவிகளின் நேர்மையான நடவடிக்கையை பாராட்டினர்.
— ஜோஷ்
Comments are closed, but trackbacks and pingbacks are open.