களத்திற்கு வராத மாநகராட்சி மேயர்! குற்றம்சாட்டும் மாமன்ற உறுப்பினர்கள் !
சிவகாசி மாநகராட்சியின் வேலை திமுக அரசுக்கு தேர்தலில் பெரும் பின்னடைவு – மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!”
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
6 வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா பேசும்போது, “சிவகாசி நகரில் குப்பை அள்ளுதல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. மேயர் இதுவரை எந்த பகுதிகளுக்கு நேரில் வந்து ஆய்வு செய்ததில்லை,” என குற்றச்சாட்டு முன்வைத்தார்.

அதேபோல் 9 வது வார்டு கவுன்சிலர் சுதாகரன், “மாநகராட்சியில் பயன்பாட்டில் உள்ள குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்தும் காலாவதியானவை. இவ்வாகனங்களால் பொதுமக்களுக்கு விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால், அது ஆணையர் மீது கொலை வழக்காக பதிவு செய்யப்படும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக அனைத்து வாகனங்களையும் புதுப்பிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
மேலும், 7 மற்றும் 8வது வார்டு மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து, “மாநகராட்சியில் வீட்டு வரி ரசீது போடுவதற்கே 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகின்றது. இதை பத்திரிகையாளர்கள் பதிவு செய்து வெளிக்கொணர வேண்டும்,” எனக் கூறினர்.
மாநகராட்சி அலட்சியம் மற்றும் லஞ்ச ஒழுங்கு காரணமாக திமுக அரசுக்கு மக்கள் மனதில் கெட்டபெயர் ஏற்பட்டு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என அவர்கள் எச்சரித்தனர்.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.