இரட்டை கொலை மர்மம்! திருட்டா? பழிவாங்கலா?
ராஜபாளையம் அருகே தேவதானம் சாமி கோவிலில் இருவர் மர்மமாக வெட்டி கொலை – உண்டியல் உடைக்கப்பட்டது, நகை மாயமா? போலீசார் விசாரணை!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் அமைந்துள்ள அருளிய சாமி கோவிலில் நடந்த இரட்டை கொலை மற்றும் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் தினமும் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இக்கோவிலில் இரவு காவலர்களாக பணியாற்றி வந்த பேச்சிமுத்து (வயது 50) மற்றும் சங்கரபாண்டியன் (வயது 65) ஆகியோர் கடந்த இரவு வழக்கம்போல் கோவில் வளாகத்தில் காவல் பணியில் இருந்துள்ளனர். ஆனால், இன்று அதிகாலை வரை அவர்கள் வீட்டிற்கு திரும்பாததால், பகல் வேளையில் கோவிலுக்கு சென்ற ஊழியர்கள் இருவரும் கோவில் வளாகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து ராஜபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் மற்றும் விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதும், சில அலமாரிகள் சிதறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவிலில் இருந்த பொன், வெள்ளி நகைகள் மற்றும் பணம் மாயமானதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போலீசார் திருட்டு நோக்கிலா, பழிவாங்கும் நோக்கிலா இந்தக் கொலை நடந்தது என்பதையும், கோவிலில் இருந்த நகைகள் மாயமானதா என்பதை உறுதி செய்வதற்கும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
இந்த இரட்டை கொலைச் சம்பவம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— மாரீஸ்வரன்










Comments are closed, but trackbacks and pingbacks are open.