பறை இசையின் பெருமையைப் பேசும் ‘மாண்புமிகு பறை’
சியா புரொடக் சன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசைத் தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கு படம் ‘மாண்புமிகு பறை’. இப்படம், வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது .
இந்நிகழ்வினில் பேசிய சிலரின் பேச்சு….
இயக்குநர் விஜய் சுகுமார்
“இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்புமிகு பறையின் கதையை எங்கள் தயாரிப்பாளர் சுபா & சுரேஷ் ராம் தான் எழுதியுள்ளார்கள். இரண்டு பாகங்களாக இப்படத்தைத் திட்டமிட்டுள்ளோம். முதல் பாகத்தில் பறை இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும், இரண்டாம் பாகத்தில் பறை இசை எத்தனை வகைப்படும் என்பதையும் சொல்லத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் பறை இசையை உலகம் முழுக்க கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் இப்படத்தை எங்கள் தயாரிப்பாளர்கள் தயாரித்தனர். இப்போது உலகம் முழுக்க பல விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு விருது வாங்கியுள்ளது. எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது. தேவா சார் அற்புதமான இசையைத் தந்துள்ளார். சூப்பர்ஸ்டா ரின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்”
இணை தயாரிப்பாளர் நக்கீரன்
“இது திரையிசை வெளியீட்டு நிகழ்வல்ல, நம் பாரம்பரிய இசையின் கொண்டாட்டம். இந்த பறை இசை இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இந்த இசை வளர்ந்து வருகிறது. கலையைத் தாண்டி இந்த இசை ஒரு அடையாளச் சின்னம். ஆதி பறை என்பதை நாங்கள் நம்புகிறோம் இதை அனைவரும் கொண்டாடுவோம். இப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி”
ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார்
“உள்ளூரின் பெருமையைப் பேசுவது தான் மிகச்சிறந்த உலக சினிமா. நாங்கள் நம் ஊரின் பெருமையை, உண்மையை இப்படைப்பில் கொண்டுவந்துள்ளோம்”.
பறை இசைக் கலைஞர் *வேலு ஆசான்*
“பறை இசை தான் எனக்குத் தெரியும், பேசத் தெரியாது. மனிதன் பேசுவதற்கு முன் ஆரம்பித்த இசை பறை இசை. மனிதனின் அனைத்து விஷேசங்களிலும் இசைக்கப்படுவது பறை தான். மனிதனின் சந்தோசத்துக்கு இசைக்கும் இசை தான் பறை. பறை இசையை பெருமைப்படுத்தியதற்கு நன்றி”.
கலைமாமணி முனுசாமி
“நான் பறை இசைக் கலைஞன், என் தாத்தா, அப்பா எல்லோரும் பறை இசைக் கலைஞர்கள் தான். பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம். மேடை கச்சேரிகளில் பறை இசையைக் கொண்டு சென்று சேர்த்தேன். பறை இசையை பெருமைப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி”.
நடிகர் ஆரியன்
“இப்படம் கிடைக்கக் காரணமான தயாரிப்பாளர்ளுக்கு நன்றி. என்னை நம்பி எனக்கு இந்த கேரக்டர் தந்த இயக்குநருக்கு நன்றி”.
நடிகை காயத்திரி
“பறை எல்லா இசைக்கருவிகளின் தாய் தான் பறை. எல்லா செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்க, திருவிழாவிற்கு, விஷேசத்திற்கு என எல்லாவற்றிற்கும் பறை தான் அடிப்படை. அந்த பறை இசை பெருமை பேசும் படத்தில் நானும் அங்கமாக இருப்பது எனக்குப் பெருமை”.
லியோ சிவக்குமார்
நான் திண்டுக்கல்லில் பிறந்து முதன் முதலில் கேட்ட இசை பறை இசை. இன்று நான் பறை இசை கலைஞனாக நடித்திருப்பது பெருமை. இந்த கதையை இயக்குநர் சொன்ன போதே இதன் பெருமை புரிந்தது, இதில் நடிக்கக் கண்டிப்பாகப் பறை கற்றுக்கொள்ள வேண்டுமென, சக்தி கலைக்குழுவில் பறை கற்றுக்கொண்டு இப்படத்தில் நடித்தேன். இணை தயாரிப்பாளர் முரளி இல்லாமல் இப்படம் இல்லை”.
கே. பாக்யராஜ்
“அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்கிறது என்பார்கள் இங்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஶ்ரீகாந்த்தேவா தேசிய விருது வாங்கி தேவாவைக் கௌரவப்படுத்தியுள்ளார். அதே போல நாயகன் லியோ அவர் அப்பா லியோனி போல அருமையாகப் பேசினார். பறை இசை நான் சின்ன வயதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் கேட்டுள்ளேன். அது சாவுக்காக அடிக்கும் பறை இல்லை, சாமிக்காக அடிக்கும் பறை. சாமியிடம் செல்வதால் அதை அடித்து வழியனுப்புகிறார்கள். ஆதி தமிழனின் முதல் இசை பறை தான்”.
திண்டுக்கல் லியோனி
“இந்த தலைப்பே ரொம்ப அருமையான தலைப்பு. பறை இசைக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படத்தினுடைய தயாரிப்பாளர் சுபா மற்றும் சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துக்கள் இயக்குநர் இங்கும் பரபரப்பாகவே இருக்கிறார். படத்தை மிக அற்புதமாகவே உருவாக்கியுள்ளார். பாட்டுக்கு ஆடி இந்த விழாவைத் துவங்கி வைத்த எழில் குழுவுக்கு வாழ்த்துக்கள். இந்த கூட்டத்தில் அவ்வளவு பேரையும் தன் பக்கம் கவர்ந்து தனக்காகக் கைதட்ட வச்ச அற்புதமான வாத்தியார் முனுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தேனிசைத் தென்றல் தேவா தான் இப்படத்தின் ஹீரோ”.
தொல் திருமாவளவன்
“இந்த திரைத்துறையை நாங்கள் முற்போக்கு சிந்தனைக் களமாகப் பயன்படுத்துவோம் என்கிற அந்த ஆற்றல் மிக்கவர்களாக இந்த படக்குழுவினர் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்தப்படத்தை நாம் முழுமையாகப் பார்த்தால் தான் என்ன கதை கருப்பொருளாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த தலைப்பே நம்மை வியக்க வைக்கிறது. ஆழமாக சிந்திக்க வைக்கிறது. அந்த வகையிலே இது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வைப்பதற்குத் தமிழ்ச் சமூகம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தை களும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்போம்”.
இப்படத்தில் லியோ சிவக்குமார்,காயத்ரி ரெமா, கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக் ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்பக் குழு
கதை, திரைக்கதை: சுபா &சுரேஷ் ராம்
இயக்கம் :எஸ்.விஜய் சுகுமார்
ஒளிப்பதிவாளர் : ரா. கொளஞ்சி குமார்
படத்தொகுப்பு :சி. எஸ். பிரேம் குமார்
இசை :தேனிசைத் தென்றல் தேவா
நடன இயக்குனர் :ஜானி
பாடல்கள் : சினேகன்
கலை :விஜய் ஐயப்பன்
இணை தயாரிப்பு: ஜெ. எப். நக்கீரன் & கவிதா
நிர்வாக தயாரிப்பாளர் : த.முரளி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்.
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.