சாதி சனாதன எதிர்ப்பில் சாதித்து காட்டிய மாவீரன் சாகு மகாராஜா!
சாகு மகாராஜா. இயற்பெயர் யஸ்வந்த்ராவ் அரசர் குடும்பம் இவரை தத்து எடுத்து முடிசூட்டு விழா நடத்தியது . அரசராக பதவி ஏற்கும் முன்பு இவருக்கு பயிற்சி வழங்கியவர் Stuart Mitford fraser என்கிற ஆங்கிலேய அதிகாரி . பிற்காலத்தில் Fraser மைசூர் அரசருக்கும் பதவியேற்கும் முன்பு பயிற்சி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்தியாவில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு முன்மொழிந்த கோல்காபூர் சாகு மகாராஜாவும் (1902) , மைசூர் மகாராஜாவும் Stuart Mitford fraser அவர்களிடம் அரசியல் பயிற்சி பெற்றவர்கள் என்பது கவனிக்கதக்கது. பார்ப்பனிய எதிர்ப்பு , கல்வி புரட்சி , பெண் கல்வி , இடஒதுக்கீடு , ஒடுக்கப்பட்டோர் நலன் என மகத்தான ஆட்சியை கோல்காபூர் சமஸ்தானத்தில் தந்தவர் சாகு மகாராஜா .
சாதிமறுப்பு திருமணத்தை ஆதரித்து அவை செல்லும் என்று சட்டம் தந்தவரும் இவரே தான் . பிராமணர் அல்லாதோர் இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று எண்ணி அதற்கான முன்னெடுப்புகளை எடுத்தவர் . முற்போக்கு சக்திகளோடு தோழமை பாராட்டியவர்.
முஸ்லிம்களின் மசூதியை ஹிந்துக்கள் கையகப்படுத்த பார்க்கிறார்கள் என்கிற சிக்கல் எழுந்த போது கூட, இந்து அரசு இந்துக்களின் பக்கம் தான் நிற்கும் என்று இல்லாமல் சுமுகமாக மதச்சார்பு இல்லாமல் அந்த சிக்கலை தீர்த்துவைத்தார் சாகு மகாராஜா .
பார்ப்பனர்கள் சாகு மகாராஜாவை ஒதுக்கிய போது , தன்னுடைய சமஸ்தானத்தில் பார்ப்பனர்களுக்கு பதிலாக மராத்தாக்களை அர்ச்சகராக நியமித்தவர்.
சாகு மகாராஜாவுக்கும் – அம்பேத்கருக்கும் இடையே கொள்கை உறவு இருந்தது. அந்த கொள்கை உறவை வெளிப்படுத்த அம்பேத்கர் மீண்டும் போய் அயல்நாட்டில் படிக்க நிதி அளித்து உதவினார். சாகு அவர்களின் இயற்பெயரான யஸ்வந்த் என்பது தான் அம்பேத்கரின் மகன் அவர்களின் பெயர் என்பதையும் கவனிக்க வேண்டும் . இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சமூகப் புரட்சியை நிகழ்த்திய சாகு மகாராஜா , 1922 மே மாதம் 6, ஆம் தேதி காலை சுமார் 5;45 மணி அளவில் இந்த மண்ணை விட்டு பிரிந்தார் . நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு கடைசி நிமிடம் வரை சுயநினைவோடு இருந்த அவர் “நான் போவதற்கு தயாராகிவிட்டேன் , எனக்கு அச்சம் இல்லை , அனைவருக்கும் போய் வருகிறேன்” என்று சொன்னதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் பார்ப்பனியத்தை எதிர்த்த அந்த அரசனின் இறுதி நிகழ்வுகள் வரலாற்றில் இன்னொரு சிறப்பை சேர்த்தது . பிற்படுத்தப்பட்டோருக்கு , தலித் மக்களுக்கு முன்னுரிமை வழங்கியதால் இது கலியுகம் இந்த யுகத்தில் அரசர்களும் சூத்திரர்கள் தான் என்று பரப்புரை செய்த பார்ப்பனர்கள் சாகு மகாராஜா உயிரோடு இருந்தபோது அவரை அரசராக ஏற்க மறுத்தார்கள் . இதனாலேயே வேதங்கள் தெரிந்த எவரும் அர்ச்சகராக முடியும் என்று சிவாஜி வேத பள்ளியை தொடங்கினார் சாகு. இதில் மராத்தாக்கள் பயின்றார்கள் . அங்கு பயின்ற இளம் மராத்தாக்கள் தங்களுக்கு பிற்காலத்தில் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை.
சாகு மகாராஜாவுக்கு முன்புவரை அரசன் இறந்தால் சடங்குகளை செய்து வந்த பார்ப்பனர்கள் , சாகு உருவாக்கிய வேதப்பள்ளியில் பயின்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கள் அரசனுக்கு இறுதி சடங்குகளை செய்வதை வேறு வழி இல்லாமல் வேடிக்கை பார்த்தார்கள்.
அ .அசோக்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.