எல்லோரும் பிடித்த விஜய்யாக மாற்ற முயலுங்கள்!
அன்புள்ள தம்பி ஜேசன் சஞ்சய் ! வணக்கம். நலமா ?
உங்களை நான் அறிந்தேனில்லை .. உங்கள் தந்தையார் ஜோசப் விஜய் என்பதைத் தவிர . பொதுவெளியில் எவருக்குமே, உங்கள் குடும்பப் பின்னணிப் பற்றி எந்த விதமான தகவலும் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமுமில்லை. தனி மனிதச் சுதந்திரத்தை தமிழ்நாடு மதித்து போற்றுவதை இதிலிருந்தே நீங்கள் உணரலாம்.
சகோ ! கடந்த மூன்று ஆண்டுகளாக, தங்களின் தந்தையார் ஓர் அரசியல் கட்சி ஆரம்பித்து, அந்த இயக்கத்திற்கு சற்றேனும் அறிவுள்ள ஆலோசகர்களை உடன் வைத்துக் கொள்ளாமல், கண்ணியமற்றவர்களையும், தனி மனிதக் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களையும் நியமித்து, அவர்களின் கேடு தரும் அறிவுரைகளை ஆராயாமல் கேட்டு செயல்பட்டதால், மிகக் கடுமையான, எளிதில் வெளிவர முடியாத பல வழக்குகளில் சிக்கியதோடு, தங்கள் தந்தையாரின் தொழிலையும் முடக்கும் வேலைகளை அவ்வழக்குகளை போட்ட ஒன்றிய அரசு செய்து விட்டது.

அவர்கள் பின்னிய சதி வலையில் முழுவதுமாக மாட்டிக் கொண்டுள்ள தங்களின் தந்தையார், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளார் . இதனால் அவர் மிகமிக மோசமான கீழ்த்தரமான பல வார்த்தைகளை, அவர் தரத்தில் இருந்து தாழ்ந்து, பிதற்றிக் கொண்டிருக்கிறார் .
அறிவுள்ள எவனும் சிந்தித்தும் பேசியுமிறாத பல பொய்களை மனசாட்சி இன்றி பொதுவெளியில் பேசி, அழுது, நாடகமாடுகிறார் .
அரசியலில், தன் கொள்கைகளோடு முரண்படுபவர்களோடு வாதங்கள் செய்வதை விட்டு, பல சமயங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், துணை முதலமைச்சர் அவர்களையும் அவர்கள் வகிக்கும் பதவிக்குக் கூட மதிப்பளிக்காது, கண்ணியக்குறைவாக , பண்படாத தற்குறிகள் போலவே செயல்படுகிறார்.
அவர் வேலூரில் பேசியவைகளையும் , அவரின் உடல் மொழிகளையும் கவனித்த போது, ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது சகோ. அலர் பெற்றதும் , அவரைப் பெற்றதும் பக்கத்தில் இல்லாமல் தனிமையில் அவர் எத்தகைய மன உளைச்சலில்/அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது . இந்நிலையில், அரசியல் பகையையும் தாண்டி அவரின் இந்த பரிமாணம், எங்களைப் போன்ற விஜய் ரசிகர்களை வேதனைப்படுத்தி , பரிதாபம் கொள்ள வைக்கின்றது.

தங்களிடம் ஒரு கோரிக்கை சகோ .. நீங்கள் அவருடன் ஒரே வீட்டில் வசிக்கிறீர்களா ? தினந்தோறும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவீர்களா? நாளைக்கு ஒரு முறையாவது உரையாடுவீர்களா ? என்பதை நாங்கள் அறியோம். தயை கூர்ந்து அவரின் மன, உடல் நலனை முன்னிட்டு அவருடன் நன்றாகப் பேசி , மன அழுத்தத்தைக் குறைக்கப் பாருங்கள். தங்களின் தந்தையார் இத்தமிழ்நாட்டின் மிக உயர்ந்த நடிகர், அவரை அறிவீனர்களிடம் இருந்து மீட்டு பழைய, எல்லோரும் பிடித்த விஜய்யாக மாற்ற முயலுங்கள். வயது குறைவாக இருந்தாலும் அதுவே நீங்கள் இந்த மண்ணிற்கு செய்யும் கைம்மாறு .
( நீங்கள் இன்னும் பொது வாழ்க்கைக்கு வரவில்லை. எனினும், தங்கள் தந்தையார் பற்றி உங்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதியமைக்கு வருந்துகிறேன் சகோ )
நீங்கள் உங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ, அகிலமெல்லாம் தீங்கின்றி ஓங்க அரங்கனைப் பாடிய ஆண்டாளின் திருவடிகளைத் தொழுகின்றேன் .
— அ. ஜாகிர் உசேன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.