குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்படும் ! மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி, எம்.பி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், 12-ஆம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைதாகி, விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாணவியின் குடும்பத்தினரை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி: மாணவியின் குடும்பத்தினருக்கு சிறிய மனநிம்மதி தரக்கூடிய அளவுக்கு, காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர். நிச்சயமாக இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், விரைவில் மாணவிக்கு நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படும் என்றார்.
இந்தச் சந்திப்பின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
— மணிபாரதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.