தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 15-ஆவது தேர்தல் 2016 மே மாதம் 16-ஆம் நாள் நடைபெற்றது. 2014 செப்டம்பர் 27 இல் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா பதவி விலகினார். பின்னர் மேல் முறையீட்டில் 2015-ஆம் ஆண்டு மே 11-ஆம் நாள் ஜெயலலிதா குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஓராண்டு இடைவெளியில் 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக தனித்தே போட்டியிட்டது. மனிதநேய ஜனநாயகக் கட்சி (தமிமுன் அன்சாரி) தமிழ் மாநில முஸ்லீம் லீக் (ஷேக் தாவூத்), இந்தியத் தவ்ஹீத் ஜமா அ (எஸ்.எம்.பாக்கர்) இந்தியக் குடியரசு கட்சி (செ.கு.தமிழரசன்), கொங்கு பேரவை கட்சி (உ.தனியரசு) சமத்துவ மக்கள் கட்சி (சரத்குமார்), சமத்துவ மக்கள் கழகம்( எர்ணாவூர் நாராயணன்), முக்குலத்தோர் புலிப்படை (கருணாஸ்) போன்ற சிறுசிறு கட்சிகளை மட்டுமே கூட்டணியில் இணைத்துக்கொண்டு அதிமுகவின் சின்னமான ‘இரட்டை இலை’யில் போட்டியிட வைத்ததன் மூலம் தமிழ்நாட்டின் 234 தொகுதியிலும் அதிமுகவே போட்டியிட்டதாக ஒரு புதிய வரலாறு ஏற்பட்டது.

திமுக கூட்டணியில் இந்தியத் தேசியக் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி (பொன்.குமார்) சமூகச் சமத்துவப் படை (சிவகாமி) மக்கள் தேமுதிக (சந்திரகுமார்) ஆகியோர் கூட்டணியில் இடம் பெற்றிருந்தனர்.
ஜெயலலிதா – விஜயகாந்த் இடையே சட்டசபையில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, மீண்டும் விஜயகாந்த் அதிமுவோடு கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் திமுக தலைவர் கருணாநிதி திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது.

திமுக மற்றும் அதிமுக என்னும் இரு கட்சிகளுக்கும் மாற்றாகக் குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் மக்கள் நலக் கூட்டணி என்னும் புதியதோர் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு மதிமுக வைகோ ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இக் கூட்டணியில் தேமுதிக. விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம், தமிழ் மாநிலக் காங்கிரஸ் (ஜி.கே.வாசன்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பாஜக இந்திய ஜனநாய கட்சியுடன் (பாரிவேந்தர்) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி, பாமக, இந்தியச் சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ.) தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை தனித்தே போட்டியிட்டன.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து விசிக சார்பில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி போட்டியிட்டார். மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார். பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பென்னாகரம் தொகுதியில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தார். காட்டுமன்னார்குடியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மதிமுக தலைவர் வைகோ போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன், பி.வளர்மதி. எஸ்.கோகுல இந்திரா ஆகிய முன்னாள் அமைச்சர் 2016 தேர்தலில் தோல்வி அடைந்தனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடலூரில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமு கூட்டணி 40.8%. திமுக கூட்டணி 39.7%, மக்கள் நலக் கூட்டணி 6.1% வாக்குகளைப் பெற்றன. அதிமுக, திமுக கூட்டணி இடையே 1.1% வேறுபாடுதான் இருந்தது. மக்கள் நலக் கூட்டணி 6.1% வாக்குகளைப் பெற்றுத் திமுகவின் வெற்றியை பறித்தது என்ற பார்வை அரசியல் களத்தில் நிலவியது.
ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சர் ஆனார். உடல் நலக் குறைவால் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சர் ஆனார். பின்னர் 2017 பிப்ரவரி 18ஆம் நாள் அதிமுகவின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2021 மே மாதம் வரை முதல் அமைச்சராக இருந்தார்.
(அடுத்த இதழில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இடம் பெறும்)
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.