சிறுவணிகர்களை வஞ்சிக்கிறதா, திருச்சி மாநகராட்சி?
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தின் மேற்கு கரைப் பகுதியில் அமைந்திருந்த பர்மா பஜார் கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக அகற்றினர். இந்நிலையில், அப்புறப்படுத்தியவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில், திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ”திருச்சி மாநகராட்சி பகுதியில் கிழக்குச் சட்டமன்றத் தொகுதியை குறிவைத்து அங்கிருக்கும் சிறு வணிகர்களை யானை குளத்தில் எந்த அடிப்படை வசதியும் செய்து தராமல் அப்புறப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கொள்கையுடன் ஒரு தலைபட்சமாக செயல்படும் திருச்சி மாநகராட்சி சிறு வணிகர்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்டம் வன்மையாக எதிர்க்கிறது. சாலையோரம் அமைந்துள்ள பெட்டிக்கடை வணிகர்கள் மாநகராட்சியால் இடமாற்றம் செய்வதை ஏற்றுக் கொண்டும் சாக்கடை அமைப்பது குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் தனது அராஜக போக்கை காண்பிப்பது சிறு வணிகத்தை நாசமாக்கும் செயலாக தெரிகிறது.
எனவே, வியாபாரிகள் அனைவரது நலன் கருதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், வியாபாரிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.