தடைக்கல்லான சாலை ! தள்ளாடும் பேருந்துகள் !
பூதலூர் வட்டம் இளங்காடு என்ற ஊர் கல்லணை – திருக்காட்டுப்பள்ளி மார்க்கத்தில் உள்ளது. இயற்கை விவசாயம் நம்மாழ்வார் பிறந்த ஊர். இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களை உருவாக்கிய மண். கல்வி பெற்றவர்கள் அதிகம் உள்ள ஊர். ஊராட்சித்தலைவர், ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரில் மாரகேரி, கடம்பங்குடி வழியாக இளங்காடு ஊரின் வழியே திருக்காட்டுப்பள்ளி வரையும் ஒரு அரசுப் பேருந்து வந்து செல்கின்றது. தஞ்சாவூரில் இருந்து தடம் எண்-51 நகரப்பேருந்து திருக்காட்டுப்பள்ளி இளங்காடு வழியாக பக்கத்து ஊர் உஞ்சினி வரை மூன்று முறை சென்று வருகின்றது. அதோடு இல்லாமல் உஞ்சினி ஊரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளியேறும் நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள் இளங்காடு வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இச்சூழலில் இவை அனைத்துக்கும் பெரிய தடைக்கல்லாக இளங்காடு, தெருவில் உள்ள திருப்பு முனை அமைந்திருக்கிறது. இந்த திருப்பத்தில், பலமுறை பேருந்துகள் சிக்கியுள்ளன. லாரிகளுக்கும் இதே நிலைமைதான். மாவட்ட நிர்வாகம் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை.
உள்ளாட்சியின் பதவிகாலம் முடிந்தாலும் கூட, தனி அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர்கள் சேர்ந்து முயற்சி எடுத்தால் ஒழிய இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது என்பதே ஊர் மக்களின் கருத்தாக உள்ளது. மனமிருந்தால், மார்க்கமுண்டு, செய்வார்களா அதிகாரிகள்?
— தஞ்சை க.நடராசன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.