திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோரிடம் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் நீலகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 56 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் துறவிகளான அருட் சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகளால் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் நடத்தப்படுவதை கண்டிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் பள்ளி நேரம் முடிந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை செய்வது மிகவும் சிரமம். பெரும்பாலும் பெண் ஆசிரியர்கள் இருப்பதால் பள்ளி நேரம் முடிந்து மாலை நேரத்தில் இப்பணியினை மேற்கொள்வதால் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே அவர்களை பள்ளியில் இருந்து விடுவித்து மாற்றுப் பணி ஆணை வழங்கி பணியினை மேற்கொள்ள உரிய உத்தரவு வழங்க வேண்டும். மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் நடத்தும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு அளித்த போது மாநகரத் தலைவர் ஹக்கிம் அலி, மாநகரப் பொருளாளர் கீதா மூக்கையன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஐசக் டேவிட் , .ஜேம்ஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.