நாங்க என்ன பன்ன முடியும்? விதிமுறையை தளர்த்துங்க! FSSAI-க்கு கோரிக்கை !
மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் தேவராஜன், செயலர் மனோகர் ஆகியோர் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (FSSAI) ஆணையத்திற்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருக்கிறார்கள்.
தானியங்களை அரைத்து மாவு பொருட்களாக மதிப்புகூட்டு சேவை அடிப்படையில் இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களின் செயல்பாட்டை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) கண்காணித்து முறைப்படுத்தி வருகிறது. இதன்படி, வேளாண் விளை பொருட்களில் அதன் தன்மைக்கேற்ப அதிகபட்ச மீதமுள்ள அளவை (Maximum Residue Limit MRL) எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் ஆணையம் நிர்ணயம் செய்திருக்கிறது.

இந்த பின்னணியில்தான், வேளாண் விளை பொருளான கொண்டைக்கடலையிலிருந்து (Bengal Gram) நேரடியாகத் தயாரிக்கப்படும் கடலைமாவின் (Besan flour) குளோர்பைரிபாஸ் அதிகபட்ச மீதமுள்ள அளவை (Maximum Residue Limit MRL)யில் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள். கொண்டை கடலை விவசாய உற்பத்தியில் குளோர்பைரிபாஸ் பூச்சிக்கொல்லி மருந்தினை விவசாயப் பயன்பாட்டிற்கும், பூச்சிகளை அழிக்கவும், பயிர் சேதத்தைக் குறைத்து விளைச்சல் பாதுகாக்கப்படவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்காரணமாக, குளோர்பைரிபாஸ் விவசாய நிலையிலேயே, விளைபொருளான கொண்டைகடலையில் சேர்கிறது. இதன் அளவை கடலைமாவு (Besan flour ) தயாரிப்பு நிலையில் கட்டுப்படுத்த அல்லது நீக்க மாவுத் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித சாத்தியக்கூறுகளும் கிடையாது என்பதாக தெரிவிக்கிறார்கள்.
ஆகவே, குளோர்பைரிபாஸ் அளவுக்கான வரம்பை, அரிசி, கோதுமை, நிலக்கடலை உள்ளிட்ட பிற வேளாண் விளை பொருட்களுக்கு இணையாக திருத்தி நிர்ணயிக்க அல்லது கடலைமாவிற்கு அதன் தன்மையைக் கருத்தில்கொண்டு சிறப்பு விலக்கு அல்லது தளர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள்.
இதன்வழியே, உணவுப்பாதுகாப்பு தரத்தை பாதிக்காமல், மாவுத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை நிறுவனங்களைப் (MSMEs) பாதுகாக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்கள்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்த்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.