காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மே-15 க்குப் பின் கூட்டலாம்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆவது கூட்டத்தை அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் 29.4.2026 அன்று, புதுதில்லியில் நடத்த அறிவித்துள்ளார். இந்திய அரசின் நீராற்றல் துறையின் தலைமை அதிகாரியாக செயலாற்றி, பணிஓய்வு பெற்றபின் இவரைக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஆக்கினார் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி.
எஸ்.கே. ஹல்தர் இந்திய நீராற்றல்துறை தலைமை அதிகாரியாக இருந்தபோது, அப்போது கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையா (காங்கிரசு) – மேக்கேதாட்டு அணைக்கான சுருக்கமான அறிக்கையை அளித்து அனுமதிகோரினார். உடனே மேற்படி ஹல்தர், மொத்த திட்ட மதிப்பீட்டுத் தொகையுடன், மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report-DPR) அளிக்கவும் என்று கேட்டுப் பெற்றார்.
பணி நிறைவுக்குப்பின், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரான எஸ்.கே. ஹல்தர், கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைக்கான விரிவான அறிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முன்வைத்து, தமிழ்நாடு மற்றும் புதுவை பிரதிநிதிகள் எதிர்த்தபோதும் ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள அதிகாரிகளின் வாக்குகளைக் கொண்டு பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றினார். அதைச் செயல்படுத்த நீராற்றல் துறைக்கு அனுப்பி வைத்தார். இப்போது மேக்கேதாட்டு அணைகட்டும் வேலைகளில் இறங்கியுள்ளது கர்நாடக காங்கிரசு ஆட்சி.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் உறுப்பு வகிக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களின் அரசுகளும் தேர்தல் கால ஆட்சிகளாக தன்னதிகாரமற்று முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை 29.4.2026 அன்று கூட்டியுள்ளார் ஹல்தர்.
அதில் கலந்து கொள்ளும் மூன்று மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், இந்திய அரசின் மறைமுக வழிகாட்டலை அப்படியே ஏற்றுச் செயல்பட வாய்ப்புண்டு. இதனால் என்ன தீங்கு வருமோ என்ற அச்சம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பிடித்தாட்டுகிறது. ஏனெனில் மோடி அரசின் கடந்த கால நடவடிக்கைகள் அப்படி இருக்கின்றன.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்குக் கர்நாடகம் திறந்துவிட வேண்டிய மாதாந்திர அளவு நீரை அப்படியே திறந்துவிடும்படி ஒரு தடவை கூட எஸ்.கே. ஹல்தர் கர்நாடகத்திற்கு ஆணையிட்டதில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு வகுத்துக் கூறிய அளவைவிட குறைவாகத்தான் ஹல்தர் கர்நாடகத்தைத் திறக்கச் சொல்வார். அந்தக் குறைந்த நீரையும் கர்நாடகம் திறக்காது. அதை, ஹல்தர் கண்டுகொள்ளவே மாட்டார்.
எனவே, இந்திய அரசு, தமிழ்நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தலையிட்டு, 29.4.2026 அன்று கூட்டியுள்ள காவிரி மேலோண்மை ஆணையக் கூட்டத்தை மே.15 ஆம் நாளுக்குப் பின்னர் தள்ளி வைக்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.