துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி முதல் வார உற்சவம் ! அதிகாலை முதல் குவிந்த ஏராளமான பக்தர்கள் !
துறையூர் பெருமாள் மலையில் புரட்டாசி முதல் வார உற்சவம் !
அதிகாலை முதல் குவிந்த ஏராளமான பக்தர்கள் !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ,”தென் திருப்பதி” என பக்தர்களால் போற்றப்படுகின்ற பெருமாள்மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு முதல் வார புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. பெருமாள்மலை மீது எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சுவாமி வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். துறையூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பெருமாள்மலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.
பக்தர்களுக்கு அடிவாரத்தில் இருந்து நடந்து செல்லும் வகையில் 1600 படிக்கட்டுகள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் எளிதாக செல்ல வசதி செய்யப்பட்டிருந்தது.மேலும் இரு சக்கர வாகனங்கள் கார் வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. முதல் வார சனிக்கிழமை இன்று மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பெரும்பாலான பக்தர்கள் நடைபயணமாக படிகள் மற்றும் மலைப்பாதை வழியாக கோவிந்தா ,கோவிந்தா எனும் கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் மலை ஏறினர்.
வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் நடைபெறும் உற்சவ விழாவில் பக்தர்களின் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை , பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றினர். மேலும் மற்ற வைணவத்திருக்கோவில்களில் இல்லாத சிறப்பாக துறையூர் பெருமாள்மலையில் கருப்பண்ணசாமி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் எங்கும் இல்லாதவிதமாக விபூதி பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பம்சமாகும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வேணுகோபால் செய்திருந்தார் .பக்தர்களின் பாதுகாப்பு கருதி துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சுமார் 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெருமாள்மலை அடிவாரத்தில் துறையூர் தனியார் அமைப்பு சார்பில் லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.