போரில்லா உலகம் என்பதே இந்தியாவின் இலட்சியம் – பிரின்ஸ் கஜேந்திர பாபு
இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கையை ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) கொள்கையாக டிசம்பர் 11, 1957 அன்று ஐ நா பொதுச் சபை (General Assembly) ஏற்றுக் கொண்டது
போர் நாட்டின் இயற்கை வளத்தையும், பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். ஆயுத உற்பத்தியாளர்கள் மட்டுமே போரினால் பயனடைவார்கள்.
இந்திய நாட்டின் ஒரு பகுதியில் ஒரு பயங்கரவாதி ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 26 உடன்பிறப்புகளை நாம் இழந்துள்ளோம்.
பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர்களையும் கண்டிப்பதோடு, அவர்களுக்கு உரிய தண்டனைப் பெற்றுத் தரவும், மீண்டும் இத்தகைய கொடுஞ்செயல் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதும் உலக நாடுகளின் கடமை.
ஐநாவின் பொதுச் செயலாளர் இந்திய நாட்டில் இந்தியர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்துள்ளார். பதற்றத்தை தணிக்க ஐநா அனைத்து வகையிலும் உதவும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் வளர்ச்சியை நோக்கி முன்னேறும் இந்தியா, போரை தவிர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.
தனி மனிதர்கள் உணர்ச்சி வசப்பட்டு பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கலாம். அரசு மக்களின் நலனை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரும் பகுதி மக்கள் தங்களின் கருத்தை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பதால், போரை விரும்பும் சிலர் உரத்து பேசுவதினால் அதுவே ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக சித்தரிக்கும் போக்கு மிகவும் ஆபத்தானது.
போரைத் தவிர்க்க வேண்டும் என்று பேசுபவர்கள் இந்தியாவின் விரோதிகள், அன்னிய நாட்டிற்கு ஆதரவாக பேசுகின்றனர் என்ற சித்தரிப்பு மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது.
போர் வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்கோடு சிலர் கூச்சலிடும் அதே வேளையில், நிதானமாக சிந்தியுங்கள் என்று மக்கள் கூற முற்பட்டால், தனது கருத்திற்கு எதிராக கருத்தே இருக்கக் கூடாது என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் கருதினால் அதுதான் சர்வாதிகாரம்.
கண்ணுக்கு எதிரே யுக்ரெய்ன் – ருஷ்ய போரை முடிவிற்கு கொண்டு வர இயலாமல் உலக நாடுகள் தவிப்பதைப் பார்க்கிறோம். யுக்ரெய்னின் இயலாமையை பயன்படுத்தி, போருக்கு உதவியதற்கு யுக்ரெய்ன் தனது இயற்கை வளங்களான கனிமங்களை அமெரிக்கா எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் அதிபர் மிரட்டி யுக்ரெய்னை பணிய வைத்துள்ளார் என்பதை கவனிக்கின்றோம்.
போராக தொடங்கி இன அழிப்பாக உருவெடுத்துள்ளதை காசாவில் பார்க்கிறோம். இத்தகைய சூழலில் போர் முழக்கம் எந்த நாட்டில், எந்த காரணத்திற்காக எழுப்பப்பட்டாலும் அது மனித குல அழிவிற்கே வழி வகுக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
உலகின் பல பகுதிகளில் அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ள சூழலில் போரின் விளைவுகளை நாம் கற்பனைச் செய்து பார்க்க இயலாது.
பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க இயலாது. போர் மூலம் பயங்கரவாதம் முடிவிற்கு வராது. பயங்கரவாதத்தை விரும்பும் நபர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
மக்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை அறிவுத் திறன் கொண்டு உறுதி செய்ய முற்பட வேண்டும்.
பல கிலோமீட்டர் ஊடுருவி நாட்டிற்குள் தாக்குதல் நடந்துள்ளது என்றால், பாதுகாப்பில் எங்கே குறை ஏற்பட்டது என்பதை தீர விசாரிக்க வேண்டும்.

இந்திய வடக்கின் உச்சியில் உள்ள மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் சட்டம் ஒழுங்கு ஒன்றிய அரசின் நேரடி பொறுப்பில் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமரின் வருகை ரத்து செய்யப்படுள்ளது.
அத்தகைய சூழலில் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஏன் கண்காணிப்பில்லாமல் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப் பட்டார்கள் என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டும்.
பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள ஒரு பகுதியில் பல ஆயிரம் மக்கள் எந்த கண்காணிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்பது மிகவும் வியப்பிற்குரியதாக உள்ளது.
இராணுவம், துணை இராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு மக்களின் வரிப் பணம் செலவு செய்யப்பட்டும், பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள ஒரு மாநிலத்தில், பாதுகாப்பு இல்லாமல் மக்கள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டது குறித்த விரிவான விசாரணை தேவை.
போர் ஆயத்த பயிற்சிகள் நாடு முழுக்க நடப்பது குழந்தைகளை மனரீதியாக பாதிக்கும். பள்ளிப் பொதுத் தேர்வுகள் முடிந்து, முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
இந்திய நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு மிகப் பெரும் பொறுப்பு உள்ளது. யுத்த வெறிகொண்டு சிலர் கூச்சலிட்டு வருகின்றனர். ஒரு சிலரின் கருத்தே ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக மாற்றப்படுகிறது.
போருக்கான ஆயத்த ஒத்திகை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வெளிவந்த பின்னரும் போரின் விளைவுகள் குறித்து அரசியல் கட்சிகள் பேசாமல் அமைதிகாக்கும் போக்கு இந்திய வரலாற்றில் இதுவரை காணப்படாத அணுகுமுறையாக உள்ளது.
போர் என்றால் பாதிப்பிற்குள்ளாவது குழந்தைகள், பெண்கள், உழைக்கின்ற மக்கள். அமைதியான முறையில் உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்தை தடுத்திட முயல்வதே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
இன்று இந்தியாவிற்கு ஆதரவு என்று கூறுபவர்கள், ஆதரவிற்கு நாளை விலை கேட்டால் இந்தியாவின் இறையாண்மை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகாதா?
நேட்டோ நாடுகளை, குறிப்பாக அமெரிக்கவை நம்பி ருஷ்யாவை பகைத்து கொள்ள தயாரான யுக்ரெய்ன் படும் துயரத்தையும், அந்த நாடு சிறுமைப் படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம். உதவுகிறேன் என்று சொன்னவர்கள் உதவியதற்கு கூலி கேட்கின்றனர். இவை மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை.
யுத்தம் இல்லா உலகம் வேண்டும். போருக்கான சூழலைத் தவிர்க்க வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முயற்சி மேற்கொள்ள வேண்டும். பதட்டம் இல்லாமல் சிந்திக்க வேண்டும். இந்திய நாட்டின் அரசியல் கட்சிகள் மௌனத்தை கலைக்க வேண்டும்.
அன்பினால் உலகை வெல்ல முடியும். இந்தியா பல முறை இதை நிரூபித்துள்ளது. இன்றைய சூழலையும் இந்தியாவால் நிச்சயம் அமைதி வழியில் எதிர்கொள்ள முடியும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அன்புமிக்க இந்திய சகோதர சகோதரிகளை பணிவுடன் வேண்டுகிறேன். நம் குழந்தைகள், அவர்தம் எதிர்காலம், நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு போரைத் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை நாம் அனைவரும் இணைந்து முன்வைப்போம்.
அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாடாக இந்தியா நீடித்திருக்க நமது காலத்தில் நமது பங்களிப்பைச் செய்திடுவோம்.
பயங்கரவாதத்தை வேரறுப்போம்!
சகோதரத்துவம் நிலைப் பெறச் செய்வோம்!
— பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு.