மயில் மார்க் பிராண்ட் மீது தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை – நிறுவன பங்குதாரர் பேட்டி
கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் பங்குதாரர்கள் பொன்முருகன் , பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உள்ளிட்டோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
தவறான தகவல்கள் பரப்பும் யூடியூபர்கள்
அந்த புகார் மனுவில் கோவையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வன்னிய ராஜன் அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் மயில் மார்க் என்ற பிராண்ட் பெயரில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 60 வருடங்களுக்கு மேலாக மூன்று தலைமுறைகளாக பருப்பு வகைகள், சம்பா ரவை ,சேமியா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக எங்களது தயாரிப்புகளில் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வேதிப்பொருள்கள் கலப்படம் செய்து இருப்பதாக ஆதாரமே இல்லாத தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர் .
கோவையைச் சேர்ந்த ரவி காந்த் என்பவர் தவறான தகவல்களின் அடிப்படையில் எங்கள் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பி வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக வேறு சில சேனல்களில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து எங்களது நிறுவன தயாரிப்புகளை சேர்த்து பொய்யான தகவல்களை சிலர் பரப்பி வருகின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எங்களது உணவுப் பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தரம் பரிசோதிக்கப்படுகிறது. மக்களிடம் இந்த தகவல்கள் ஒருவித பயத்தை உருவாக்கி வருகிறது. எங்களது நிறுவன தயாரிப்புகள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக தகவல்களை கோவையில் புதிதாக துவக்கி உள்ள ஒரு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பரப்பி வருகிறார்கள் என்பது குறித்து புகார் அளித்துள்ளோம். இந்த தகவல்களை பரப்பிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்களது நிறுவன தயாரிப்புகள் எந்த வித கலப்படமும் இல்லாதது நாங்கள் தினமும் அந்த உணவை தான் சாப்பிட்டு வருகிறோம். கடந்த அறுபது ஆண்டுகளில் எங்களது நிறுவனம் மீது எந்த புகாருமும் கிடையாது. உணவு பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது தயாரிப்பில் தரம் குறித்து நன்கு தெரியும் என்று தெரிவித்தனர்.