விருதுநகர் – தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த நீதிபதி !
விருதுநகர்- தனது மகளை அரசுப் பள்ளியில் படிப்பதற்கு சேர்த்து முன் உதாரணமாக விளங்கும் நீதிபதி.
தனியார் பள்ளிகளில் குழந்தைகளை படிப்பதற்கு சேர்த்தால் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும் எதிர்காலம் நன்றாக இருக்கும் என பல பெற்றோர்கள் வட்டிக்கு கடன்களைப் பெற்றாவது குழந்தைகளை தனியார் பள்ளியில் படிப்பதற்கு சேர்த்து வருகின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் பல அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மிகச் சிறப்பான தரமான கல்வி அரசு பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்போடு குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டு உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர்.
இதை உணர்ந்த நீதிபதி ஒருவர் அரசு பள்ளியில் தனது குழந்தையை சேர்த்து அரசு பள்ளி கல்வி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த விஜய பாரதி இவர் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் சார்பு நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டு சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது 7 வயது மகள் அன்பிற்கினியாளை கல்வி சேர்க்கைக்காக சிவகாசி, விஸ்வநத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழி கல்வியில் 2 ம் வகுப்பு சேர்த்து உள்ளார்.
இதை பள்ளி தலைமை ஆசிரியர் தனபால், மற்றும் அங்கு பணியாற்றி வரும் மற்ற ஆசிரியர்களும் மாணவ மாணவியர்களும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.
இதுபோன்று அரசு பள்ளியில் நீதிபதி ஒருவர் தன்னுடைய மகளை சேர்த்து இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.
— மாரீஸ்வரன்.