அங்குசம் பார்வையில் ‘ஆகக்கடவன’
தயாரிப்பு: ‘சாரா கலைக்கூடம் ‘ அனிதா லியோ, லியோ வி.ராஜா. டைரக்டர்: தர்மா டி.எஃப்.டெக். ஆர்டிஸ்ட்: ஆதிரன் சுரேஷ், மைக்கேல். எஸ்., சி.ஆர்.ராகுல், வின்சென்ட். எஸ்., சதீஷ் ராமதாஸ், தக் ஷண், ராஜ் சிவன், விஜய் ஸ்ரீனிவாஸ். ஒளிப்பதிவு: லியோ வி.ராஜா, இசை: சாந்தன் அன்பழகன், எடிட்டிங்: சுமித் பாண்டியன் & பூமேஷ் தாஸ், ஆர்ட் டைரக்டர்: விஜய வீரன், ஸ்டண்ட்: தேசாய். சவுண்ட் டிசைன்: சதீஷ்குமார்,பி.ஆர்.ஓ: கேப்டன் எம்.பி.ஆனந்த்.
படத்தின் தலைப்பு அருமையான தமிழில் இருக்கு. ஆனா இந்தப் படத்தைப் பத்தி அதிகமா கேள்விப்பட்டதில்ல, படம் வெளியாவதற்கு முன்பு விளம்பரப்படுத்தும் எந்த நிகழ்ச்சியும் நடந்த மாதிரி தெரியல, நடித்திருக்கும் நடிகர்களைப் பற்றியும் எந்த விவரமும் தெரியல. ”நம்பிப் போகலமா? நல்லபடியா வீடு திரும்புவோமா?” என பலகட்ட யோசனைக்குப் பிறகு, என்ன ஆனாலும் சரி, இந்த ‘ஆகக்கடவன’வா? நாமளான்னு பார்த்திருவோம் என்ற முடிவுடன் தியேட்டருக்குள் நுழைந்தோம்.

கள்ளக்குறிச்சி பகுதி தான் கதைக்களம். ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலைபார்க்கும் ஆதிரன் சுரேஷும் அவரது நண்பன் சி.ஆர்.ராகுலும் சேர்ந்து தனியாக மெடிக்கல் ஷாப் வைப்பதற்காக சிலரிடம் கடன் வாங்கி, ஊருக்குக் கிளம்புகிறார்கள். தேசிய நெடுஞ்சாலையில் போகும் போது டூவீலர் பஞ்சராகிவிடுகிறது. அருகில் இருக்கும் மைல்கல்லில் உள்ள செல்நம்பரைப் பார்த்து, போன் பண்ணிவிட்டு, ஒரு வேனில் டூவீலரை ஏற்றிக் கொண்டு காட்டுப்பகுதி வழியாக பஞ்சர் போடப் போகிறார்கள்.
அங்கே இருக்கும் மூன்று பேரைப் பார்த்ததுமே அவர்களுக்கு டவுட் வருகிரது. அவர்கள் நினைத்தது போலவே வண்டியப் பஞ்சராக்கியதே அந்த கும்பல் தான். ஒருவழியாக பஞ்சர் போட்டுவிட்டு போகும் போது பாதி வழியிலேயே பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது. இதுவும் அந்தக் கும்பல் வேலை தான் எனத் தெரிந்து மீண்டும் அதே ஸ்பாட்டுக்குத் திரும்புகிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரசியத் திருப்பங்கள், திடுக்கிடும் சம்பவங்கள் தான் இந்த ‘ஆகக்கடவன்’’
நாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்த பணம் நம்மைவிட்டுப் போகாது. அதே போல் அடுத்தவன் பணத்தை ஆட்டயைப் போட்டால் அதுவும் நிலைக்காது, ஆட்டயைப் போட்டவனும் நிலைக்கமாட்டான் என நச்சுன்னு கண்டெண்ட் பிடித்து, அதை இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்துவிட்டார் திரைப்படக் கல்லூரி மாணவரான டைரக்டர் தர்மா.
படம் நல்லாவே ஆரம்பமாச்சு. அந்த டூவீலர் பஞ்சரான பிறகு, என்னடா கொடுமை இது காட்டுக்குள்ள போய் பஞ்சர் போடுறாய்ங்கன்னு நமக்கும் கடுப்பும் சலிப்பும் கிளம்புச்சு. இப்படியே இடைவேளை வரைக்கும் போச்சு. ஆனா இடைவேளைக்குப் பிறகு தாங்க, ஸ்கிரிப்டை கிரிப்பா புடிச்சு, க்ளைமாக்ஸை நச்சுன்னு முடிச்சாரு டைரக்டர் தர்மா.
எல்லோருமே புதுமுக நடிகர்கள் தான். ஆனால் அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்து திரையில் திறமையைக் காட்ட வைத்துள்ளார் டைரக்டர் தர்மா. ஆதிரன் சுரேஷ், அவரது நண்பன் ராகுல், கொள்ளைக்கும்பல் பாஸாக வரும் தாஸ், பட்டாணியாக வரும் சதீஷ் ராமதாஸ், பஞ்சர் போடும் அந்தப் பையன் என அனைவருமே சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
கேமராமேன் லியோ ராஜாவின் காட்சிக் கோணங்கள், மியூசிக் டைரக்டர் சாந்தன் அன்பழகனின் பின்னணி இசை, தென்னந்தோப்புக்குள் பஞ்சர் கடை செட், காட்டுக்குள் இருக்கும் சாமி சிலை இவற்றில் ஆர்ட் டைரக்டர் விஜயவீரன் தெரிகிறார்.
எல்லாம் சரி தான், ஆகக்கடைசியில் தியேட்டர் ஓனர் புண்ணியவான்களின் கைகளில் இருக்கு இந்த ‘ஆகக்கடவன’. இதற்கு மேல் நாம் சொல்வதென்ன?
— மதுரை மாறன்.