நீதிபதியின் பிள்ளைகளுக்கும் அட்மிசன் ! இருமடங்கான மாணவர் சேர்க்கை ! அசத்தும் அரசுப்பள்ளிகள் !
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகளில், 2025-26 ஆம் ஆண்டிற்காக மாணவர் சேர்க்கை தொடங்கிய ஒரே மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில், முந்தைய ஆண்டைவிட 2.7 மடங்கு அதிகமான மாணவர்கள் சேர்ந்திருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மதிய சத்துணவு திட்டம், புதுமை பெண் கல்வி உதவித்தொகை திட்டம், தமிழ் புதல்வன் கல்வி உதவித்தொகை திட்டம், திறனாய்வு கல்வி உதவித்தொகைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, நவீன ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிறப்பு வகுப்புகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல், ஆன்லைன் திறன் மேம்பாட்டு வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நலத்திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசுப்பள்ளிகளின் பக்கம் பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
தனியார் பள்ளியில் சேர்ந்து படித்தால்தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற பாமரனுக்கு இருந்த மோகம் குறைந்து அரசுப்பள்ளியை நோக்கி படையெடுத்திருக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க; தங்களுக்கு இருக்கும் வசதிக்கும் செல்வாக்கிற்கும் பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் தங்கள் பிள்ளைகளை சேர்க்காமல், அரசுப்பள்ளிகளில் சேர்த்து அசத்தியிருக்கிறார்கள் தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகள் இருவர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த நீதிபதி விஜயபாரதி, தனது மகள் அன்பிற்கினியாளை, தென்காசி – விஸ்வநத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சமீபத்தில், சிவகாசி நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்யப்பட்ட நிலையில் தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்திருக்கிறார். இவரது மனைவி கங்கா, விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளையைச் சேர்ந்த நீதிபதி முருகேசன் செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த ஊரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தனது மகள் புவனேஸ்வரியை எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளார்.

இதுபோல் இதற்கு முன்னரும் அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆட்சியர்கள் உள்ளிட்டோரும் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
2024 ஆம் ஆண்டில், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி தனது இரு குழந்தைகளையும் (பிரார்த்தனா 3 ஆம் வகுப்பு; சாய்பிரணவ் 1ஆம் வகுப்பு) அரசுப்பள்ளியில் சேர்த்திருந்தார். இதே ஆண்டில், அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றும் சுந்தர் என்பவர் தனது குழந்தைகள் தனது தம்பியின் குழந்தைகள் உள்ளிட்டு நெருங்கிய உறவினர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருந்தார்.

2023 ஆம் ஆண்டில், அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக பணியில் இருந்த கே.எம்.சரயு, தனது இரண்டு வயது மகள் மிலியை, காவேரிப்பட்டினத்தில் உள்ள அரசு அங்கன்வாடியில் சேர்த்திருந்தார்.
2022 ஆம் ஆண்டில், திருப்பூா் மாவட்டம் அவிநாசி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய வடிவேல், தனது மகன் நிஷாந்த் சக்தியை அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்த்திருந்தார். இதற்கு முன்னர், பணியிட மாறுதல் பெற்று பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய போதிலும் கோவை, திருச்சி, ஈரோடு என அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மட்டுமே சேர்த்து படிக்க வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே ஆண்டில், அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருந்த ஹரிகிரன் பிரசாத் தனது மகன் நிஸ்ரிக்கை நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை அரசு தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்திருந்தார்.
2021 ஆம் ஆண்டில், திண்டுக்கல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஞானசேகரன், கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்து வந்த தனது மகளை அங்கிருந்து மாற்றி, பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பில் சேர்த்திருந்தார்.
2019 ஆம் ஆண்டில், அப்போது திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சாந்தி, தனது மூத்த மகன் சக்திசர்வேஸை எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பில் சேர்த்திருந்தார்.
இதே ஆண்டில், மதுரை மேலூருக்கு புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜெயந்தி தனது (சாக்யா 7 ஆம் வகுப்பு; அசுரன் 5 ஆம் வகுப்பு) இரண்டு குழந்தைகளையும் மேலூர் நகராட்சி அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்திருந்தார்.

2017 ஆம் ஆண்டில், அப்போது சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையராகப் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி லலிதா, தனது மகள் தருணிகாவை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்திருந்தார்.
2012 ஆம் ஆண்டில், அப்போது ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஆனந்தகுமார், தனது மகள் கோபிகாவை குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், இரண்டாம் வகுப்பில் சேர்த்திருந்தார்.
தமிழகத்தில் ”ஹெல்மெட் கட்டாயம்” என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடியான தீர்ப்புகளை வழங்கியிருந்த, முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ”அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பது ஏன் கட்டாயமாக்கக் கூடாது? ” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இந்த பின்னணியிலிருந்து, யாருடைய கட்டாயத்தின் பேரிலும் அல்லாமல், தங்களது சொந்த விருப்பத்திலிருந்து அரசு ஊழியர்கள் பலரும் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்திருக்கும் சம்பவம் நெகிழ செய்கிறது.
— இளங்கதிர்.