திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ! அதிகாரி கைது !
நில உரிமையாளருக்கு சாதகமாக, காலி இடத்திற்கான வரி விதிப்பது தொடர்பாக இலஞ்சம் கேட்ட புகாரில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த வருவாய் உதவியாளர், (பில் கலெக்டர்) கைது செய்யப்பட்ட விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி கே.கே.நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர், தனக்கு சொந்தமான காலி இடத்திற்கு வரிவிதிப்பது தொடர்பாக, திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் மண்டலம் 4 இல் வருவாய் உதவியாளராக பணியாற்றும் செபாஸ்டியன் என்பவரை அணுகியுள்ளார். மேற்படி இடத்திற்கான வரி விதிப்பு நோட்டீஸை வழங்குவதற்கு ரூபாய் பத்தாயிரம் இலஞ்சம் கேட்டிருக்கிறார். இலஞ்சம் கொடுக்க விரும்பாத, சீனிவாசன் திருச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இலஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, இன்று மேற்படி வரிவிதிப்பு ரசீது வழங்குவதற்காக இலஞ்சம் கொடுக்கும்போது கையும் களவுமாக செபாஸ்டியன் பிடிபட்டார்.

திருச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல், பிரசன்னா, பாலமுருகன் ஆகியோரை கொண்ட குழுவினர், செபாஸ்டியன் பணியாற்றும் மண்டல அலுவலகத்தையும் சோதனையிட்டார்கள். போலீசாரின் சோதனையில், பிடிபட்ட பத்தாயிரம் ரூபாய் தவிர கணக்கில் வராத 24 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
— ஜான் கென்னடி.