பிரதமர் மோடியின் ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கரின் கணிப்பு பலிக்குமா ?

0

 உன்னிகிருஷ்ண பணிக்கரின் கணிப்பு பலிக்குமா ? இந்தியாவின் 18 வது மக்களவைக்கான தேர்தல், நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19 தொடங்கி ஜூன்-1 ஆம் வரையில் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகளுக்காக ஜூன்-4 ஆம் நாளை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது முறையாகவும் மோடி ஆட்சியைப் பிடிப்பாரா? எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள “இந்தியா கூட்டணி” ஆட்சியைப் பிடிக்குமா? என்ற பட்டிமன்றங்கள் இன்னும் முழுமை பெறவில்லை.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

2024
2024

”வளர்ச்சியின் நாயகன் என்பதான மோடியின் பிம்பம் தகர்ந்துவிட்டது” என்பதாக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையாக பேசி வந்த நிலையில், சமீபத்தில் வெளியான சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மோடி எதிர்ப்பாளர்களின் அந்த நம்பிக்கையையும் சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறது.

- Advertisement -

தமிழகத்தில் ஒரு சீட்டைக்கூட பாஜக கூட்டணி கட்சியினரால் பெற்றுவிட முடியாது என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டோர்களிடத்திலும்கூட, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவை தவிர்த்து, வட மாநிலங்களின் பேராதரவில் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்து விடுமோ? என்ற அச்சத்தை உள்ளூர விதைத்தும் விட்டது.

இந்தப் பின்புலத்திலிருந்துதான், “மூன்றாவது முறையாகவும் மீண்டும் அரியணை ஏறுகிறார் நரேந்திரமோடி” என்று ஆரூடம் தெரிவித்திருக்கிறார், நாடறிந்த பிரபல ஜோதிடரான பரப்பனங்காடி உன்னிகிருஷ்ண பணிக்கர். உன்னிகிருஷ்ண பணிக்கர் பற்றிய அறிமுகம் தமிழக அரசியல் வாசகர்களுக்கு அவசியமில்லாத ஒன்று. அந்தளவுக்கு தமிழகத்தோடு தொடர்புடையவர்.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு யானை
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு யானை

ஜெயாவின் ஆஸ்தான ஜோதிடராக அறியப்பட்டவர். 2001-2006 வரையிலான காலகட்டத்தில் ஜெ.வை தவிர மற்றவர் நெருங்க முடியாத அளவுக்கு ஜெ.வுக்கு மட்டுமேயான ஜோதிடராக போயஸ் கார்டனில் வலம் வந்தவர். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தண்டனையை எதிர்நோக்கியிருந்த நிலையிலும்கூட, ஜெ.வினுடைய ஜாதக பலத்தால் பெரிய சேதாரம் இன்றி மீண்டு வருவார் என்று சொன்னதோடு, அதற்கு பரிகாரமாக இவர் கூறிய ஆலோசனையின்படிதான் குருவாயூர் கோயிலுக்கு யானையை தானமாக வழங்கினார் ஜெ. சிறைவாழ்க்கையை எதிர்கொண்டு அரசியலிலும் கோலோச்சினார்.

குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், எல்லோரும் திமுக கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று அவ்வளவு நம்பிக்கையாக காத்திருந்த வேளையில், ”ஜெயலலிதா மீண்டும் அரசவையில் இடம்பிடிக்கப்போகிறார்” என்று ஆரூடம் சொன்னவர். அவர் சொன்னது போலவே, அதிமுக ஆட்சியையும் பிடித்தது. அதேநேரம், ஆட்சியைப்பிடித்தாலும் அவரது ஜாதகப்படி, ஆட்சிகாலம் முடிவடைவதற்கு முன்பாகவே அவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதாகவும் பேசியவர். அவர் சொன்னது போலவே, சர்ச்சைக்குள்ளான முறையில் இறந்தும் போனார்.

நிற்க. விசயத்திற்கு வருவோம். பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்தான ஜோதிடரும் இதே பரப்பனங்காடி உன்னிகிருஷ்ண பணிக்கர்தான்.  ஜெ.வுக்கு உன்னிகிருஷ்ண பணிக்கரை அறிமுகப்படுத்தி வைத்ததே மோடிதான்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் அடையாளம் காணப்பட்ட கரசேவகர், களப்பணிகளால் கட்சியின் கவனத்தைப் பெற்றவர் என்ற அடையாளங்களோடு, குஜராத் இனப்படுகொலையின் சூத்திரதாரி என்ற விமர்சனமும் மோடியின் மறைக்க முடியாத அடையாளங்களாக இன்றும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட மோடியை சாந்த சொரூபியாக, நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு காவி உடையோடு கோவில் கோவிலாக உலா வர செய்த வரும் உன்னிகிருஷ்ண பணிக்கர்தான்.

ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடையாத சூழலில், தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் வேளையில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் முன்பாக தியானம் செய்யப்போவதாக தமிழகம் கிளம்பி வந்ததற்கும் காரணம் அவரே தான்.

மோடி தியானம்
மோடி தியானம்
4 bismi svs

மோடி என்ற தனிநபரை தாண்டி, பாஜக ஆட்சியின் சாதனைகளுள் ஒன்றாக மார்தட்டிக் கொள்ளும் இராமர் கோயில் திறப்பு தொடர்பான அனைத்து முடிவுகளும் உன்னிக்கிருஷ்ண பணிக்கரின் கண்ணசைவில் தான் நடந்தேறியிருக்கிறது. கோயில் திறப்புக்கான நாள், நேரம் குறித்ததோடு, கோயில் திறப்புக்கு முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதனை வழிபட்டு வருமாறு கிளப்பிவிட்டதும் பணிக்கரே தான்.

அரசியல் விமர்சகர்கள் நாட்டு நடப்புகளை அரசியல் சூழல்களை கணித்து என்னதான் கருத்துக் கணிப்புகளைக் கூறினாலும், அவற்றுக்கெல்லாம் சவால் விடும் வகையில் 320 முதல் 350 இடங்களைப் பெற்று மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆகப்போகிறார் என்று அடித்துக்கூறுகிறாராம் உன்னிக்கிருஷ்ணன் பணிக்கர்.

மூன்றாவது முறையாக பிரதமராக தொடர்வதில் மோடிக்கே விருப்பம் இல்லாத சூழலிலும், மோடியை முன்னிறுத்தினால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று கண்டிப்போடு பணிக்கர் கூற, வேண்டா வெறுப்புடன் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதாக கூறுகிறார்கள்.

மோடிக்கு மாற்றாக, அமித்ஷா உள்ளிட்டு வேறு யாரை முன்னிறுத்தினாலும் தோற்பது உறுதி என்றாராம். இந்த காலகட்டத்தில் மோடியைத் தவிர வேறு யாரை முன்னிறுத்தினாலும், மோடி என்ற பிம்பம் சுக்குநூறாகிவிடும் என்று எச்சரித்தாராம்.

மோடிக்கு மாற்றாக உருவாகியுள்ள, “இந்தியா கூட்டணி” என்ற பெயரே நியூமராலஜி படி சிக்கலுக்குரியது என்கிறாராம் பணிக்கர். நாடு முழுவதும் மோடிக்கு எதிரான வலுவான கூட்டணியாக அமைத்திருந்தாலும், இந்தியா கூட்டணி என்ற பெயரை வைத்ததனால், அக்கூட்டணி பின்னடைவைத்தான் சந்திக்கும் என்கிறாராம்.

ஒருவேளை ”திராவிட கூட்டணி”, “திமுக கூட்டணி” என்று பெயர் வைத்திருந்தால் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும் என்கிறாராம். அதிலும் குறிப்பாக, மோடிக்கு மாற்றாக பிரதமர் வேட்பாளராக இந்தியா கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்படும் நபர்களாலும் அந்தக்கூட்டணிக்கு யோகம் இல்லை என்றே தெரிவிக்கிறாராம் பணிக்கர்.

சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு வட மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பலரும் கருதினாலும், அப்படியெல்லாம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை என்கிறாராம் அவர்.

ரேவந்த் ரெட்டி - பிரியங்கா - ராகுல்காந்தி
ரேவந்த் ரெட்டி – பிரியங்கா – ராகுல்காந்தி

ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத்பவார் ஆகியோருக்கெல்லாம் இல்லாத “யோகம்” பிரியங்கா காந்தி ஒருவருக்கு மட்டுமே வாய்த்திருப்பதாகவும் கூறுகிறாராம் பணிக்கர். ஒருவேளை, பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தால், மோடி பிம்பம் உடைந்திருக்கும். இந்தியா கூட்டணி வலுப்பெற்றிருக்கும் என்றிருக்கிறார் பணிக்கர்.

தமிழகம் புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது இடங்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்று கணித்திருக்கிறார் பணிக்கர். அதிமுக, பாஜக உள்ளிட்டு வேறு எந்தக் கட்சியும் ஒரு சீட்டைக்கூட தமிழகத்தில் கைப்பற்ற முடியாது என்பதாகவும் ஆரூடம் கூறியிருக்கிறார் பணிக்கர்.

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுக்கான கவுண்டன் தொடங்கியதைப்போல, 12 மணி நேரத்திற்கும் மிகக்குறைவான நேரமே உள்ள நிலையில், பணிக்கரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தைப் பற்ற வைத்திருக்கிறது. ஒருவேளை, கடந்த கால அனுபவங்களைப் போலவே பணிக்கரின் ஆரூடம் பலித்து போய், மோடியே மூன்றாவது முறையாகவும் பிரதமர் ஆகிவிடுவாரோ என்ற பதைபதைப்பை எதிர்க்கட்சியினரிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

நாளை இன்னேரம் முடிவு தெரிந்துவிடும். பொறுத்திருந்துதான் பார்ப்போமே, பணிக்கரின் கணிப்பு பலிக்குமா? இந்தியா கூட்டணிக் கட்சியினரின் நம்பிக்கை ”கை” கொடுக்குமா என்று!

– கலைமதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.