“கேரளாவின் ஜாலக்காரி நான் தான்” – சொன்னது யார்?
மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சாந்தோஷ் டி. குருவில்லா& பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பல்டி’. உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். நம்ம ஊரு சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு செப்டம்பர் 19- ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில் பேசியவர்கள்…..
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா
“இப்படத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களும் இளம் திறமையாளர்கள். அனைவரும் இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன்”.
பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்
“இப்படம் என்னுடைய கனவை நனவாகியிருக்கிறது. உதயன் பாத்திரம் ஷேன் நிகம் செய்திருக்கிறார். சாந்தனு அவருடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியிருக்கிறார். செல்வராகவன் கதாபாத்திரம் பயங்கரமாக இருக்கும். நான் செல்வராகவன் சாருடைய ரசிகன். இந்த பூமியில் இவர் தான் மிகவும் சிறந்த மனிதர். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும்”.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர்
“முதன்முதலாக உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். நன்றாக வந்திருக்கிறது. இப்படத்திற்காக இசையமைத்ததில் மகிழ்ச்சி. இன்னும் நிறைய நல்ல வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன்”.
இயக்குனர் உன்னி சிவலிங்கம்
“இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. மலையாளத்தில் எடுத்தாலும் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருக்கிறோம். நான் பாலக்காடு மலையாளி. எனது அப்பா தமிழர். பல்டி 60 சதவிகிதம் மலையாளம் 40 சதவிகிதம் தமிழ்ப் படமாக மலையாளத்தில் இருக்கும். அதிரடியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது விளையாட்டு தளமாக இருந்தால் ஆர்வமாக இருக்கும் என்று கபடியை மையப்படுத்தி இயக்கியிருக்கிறேன். ஷேன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.
சாந்தனு அண்ணனிடம் கதை கூறினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. அவருடன் 25 நாள் தான் படப்பிடிப்பு நடத்தினோம்.ஆனால், அவருடன் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து சென்றாலும் படத்திற்காக நன்றாக உழைத்திருக்கிறோம்.
என்னுடைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர்கள் அவர்கள் கம்பெனியில் 6வது புதிய இயக்குனராக என்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தில் பல புதிய ஆக்ஷன் ட்ரிக் காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அதிலும் கபடியில் அதை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து செய்தோம். அல்போன்ஸ் அண்ணாவும் இப்படத்தில் இருக்கிறார். பல தமிழ்க் கலைஞர்கள் இப்படத்தில் இருப்பதால் டப்பிங்கிற்கு தனிகவனம் செலுத்தியிருக்கிறோம். இப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்”.
ப்ரீத்தி அஸ்ரானி
“என்னுடைய முதல் படம் ‘அயோத்தி’யில் இருந்தே உங்களுடைய ஆதரவு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாரம் என்னுடைய ‘கிஸ்’ படம் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் எனக்கு இது முதல் படம். ஆனால், தமிழ்ப் படமும் சென்னையும் என்னுடைய தாய் வீடு போன்ற உணர்வு வரும். தயாரிப்பாளர் இறுக்கமாக இல்லாமல் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். உன்னி சேட்டா இயக்குனர் என்பதை விட இப்படத்தின் மூலம் அண்ணனாகிவிட்டார்.

இதற்கு முன்பு நான் நடித்த படங்களைவிட இப்படம் மிகவும் புத்துணர்ச்சியோடும், வித்தியாசமாகவும் இருக்கும். முதல் படம் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். அதுபோல, எனக்கு பல்டி படம் அமையும். அதேபோல், “ஜாலக்காரி” பாடல் எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி. கேரளாவில் நான் எங்கு சென்றாலும் என்னை ஜாலக்காரி என்று தான் அழைக்கிறார்கள். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்”.
சாந்தனு பாக்யராஜ்
“‘ப்ளூ ஸ்டார்’ பட பிரஸ் மீட்டுக்குப்பிற்கு இப்போது தான் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். என்னுடைய முதல் படம் ஆரம்பித்து இன்றுவரை நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். நடிகரோ, தொழில்நுட்ப கலைஞர்களோ எந்தளவிற்கு கடினமாக உழைக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு நீங்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறீர்கள்.
15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் இணைந்திருக்கிறேன். உன்னியின் நண்பர் தேவ் என்னை இப்படத்திற்காக பரிந்துரை செய்திருக்கிறார். உடனே உன்னி மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்து கதை கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் எனக்கு நல்ல ரீஎண்ட்ரியாக இருக்கும். மலையாளம் தெரியுமா என்று உன்னி கேட்டதும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று தெரியும்னு பொய் சொல்லிட்டேன். பிறகு நான் நடித்துவிடுவேன் ஆனால், வசனங்கள் கொஞ்சம் சிரமம் என்று கூறினேன். ஒரு மாதம் ஆன்லைன் டீச்சர் வைத்து பயிற்சி கொடுத்தார்கள். 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்து நடித்தோம். நம்மை நம்பி இங்கு வந்திருக்கிறார்கள். அனைவரும் ஆதரவு கொடுங்கள்”.
ஷேன் நிகம்
“ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா படம் இது. நாலு பசங்க, அவர்களுடைய கபடிக் குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை. பினு சேட்டா, சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி.
சாந்தனு மாதிரி ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர், ப்ரீத்தி மற்றும் இப்படக் குழு அனைவருக்கும் நன்றி.
இப்படம் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள்”.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.