மகனை பாதுகாக்க 90 வயதில் சட்டம் பயிலும் தாய்!
இந்த உலகத்துல தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என்று சொல்லுவாங்க, ஆம் இதற்கு எடுத்துக்காட்டாக தான் ஒரு சம்பவம் சீனாவில் நிகழ்ந்திருக்கிறது. பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்ட தன் மகனை பாதுகாப்பதற்காக 90 வயதான தாய் ஒருவர் சட்டம் கற்றுக்கொண்ட சம்பவம் தான் அது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த 90 வயதான ஹீ என்ற தாயின் மகன் 57 வயதான மகன் லின், இவர் மீது உள்ளூர் தொழிலதிபரை மிரட்டி 141 கோடி ரூபாய் ( 117 மில்லியன் யுவான்) பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து தன் மகனைப் பிரிந்து வாடும் ஹீ கடந்த ஆண்டு அவரை பாதுகாக்க சட்டம் பயில முடிவு செய்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவரது வயதை கருத்தில் கொண்டு குடும்பத்தினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தனது முடிவில் ஹீ உறுதியாக இருந்துள்ளார்.
குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பற்றிய புத்தகங்களை வாங்கி தானே சட்டம் பயில தொடங்கி இருக்கிறார். சட்ட புத்தகங்கள், இதழ்களை மட்டும் படிப்பதோடு இல்லாமல் வழக்குகள் தொடர்புடைய ஆவணங்களை ஆராய தினமும் நீதிமன்றமும் சென்றிருக்கிறார்.
இதற்கிடையில் லின்னை கைவிலங்குகளுடன் நீதிமன்றத்தில் பார்த்தபோது, ஹீ உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறார். இதனால் அவருக்கு பலமுறை உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. மருத்துவர்கள், மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்த போதிலும், தனது மகனின் பக்கத்தில் இருக்க விரும்பிய ஹீ, வெளியேற மறுத்திருக்கிறார். மேலும் இந்த வழக்கு இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது மற்றும் தாய் ஹீ தன் மகனை காப்பாற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.