நள்ளிரவில் அதிர்ந்த கோவை!
கோவை விமான நிலையம் அருகே யாரும் நினைக்காத நேரத்தில், ஒரு மாணவி மீது நடந்த கூட்டு பாலியல் வன்முறை செய்தி மக்களிடையே ஒரு புயலை எழுப்பியது.
இது ஒரு செய்தி அல்ல.
இந்த உண்மை…
இந்தச் சம்பவம் ஒரு பெண்ணின் உடலை மட்டும் அல்ல, அவளுடைய மனிதத்துவத்தையே காயப்படுத்தப்பட்ட தருணம். ஆனால் இந்தச் செய்தியை கேட்டவுடன் சமூகத்தின் முதல் கேள்வி என்ன?
“ராத்திரி 11 மணிக்கு அவள் எதுக்குப் போனாள்?”
அதே சமயம் குற்றவாளியின் குறித்து யாரும் கேட்காத கேள்வி:
“ஏன் பெண்ணை மனிதராய் பார்க்க அவர் கற்றுக்கொள்ளவில்லை?”
சமூகம் முதலில் மாற்ற வேண்டியது கேள்வி எடுக்கும் திசை.
பாதிக்கப்பட்டவரை அல்ல.
பாதிப்பு கொடுத்தவரின் மனநிலையை தான் நாம் கேள்வி கேட்க வேண்டும்.
பெண்ணின் நடத்தை காரணம் அல்ல.
பெண்ணின் உடை காரணம் அல்ல.
இரவு காரணம் அல்ல.
காரணம் ஒன்று தான் மனிதத்துவமற்ற மனநிலை.
பெண்ணை ஒழுக்கம் கற்றுக்கொள் என்று மட்டும் சொல்லும் சமூகம்.
ஆணுக்கு, மரியாதை கற்றுக்கொள், கட்டுப்பாடு கற்றுக்கொள், மனிதன் ஆக கற்றுக்கொள் என்று சொல்ல மறக்கிறது.
பெண்ணின் பாதுகாப்பு என்பது அவளை வீட்டுக்குள் அடைப்பது அல்ல.
ஆண் மனத்தில் மரியாதையை நடவு செய்வதே உண்மையான பாதுகாப்பு.
“அவள் ஏன் அங்கு இருந்தாள்?” என்பதல்ல கேள்வி.
“அவன் ஏன் அவளை ஒரு உடலாக மட்டுமே பார்த்தான்?” என்பதே கேள்வி.
மனிதம் தவறும் இடம் அங்கே….
அந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட மன ரணம் நிமிடங்களில் குணமாகாது.
அவளின் வாழ்க்கையின் நம்பிக்கை , மன வலி நமக்கு கேட்கவில்லை.
ஆனால் அவள் அதை தினமும் உணர வேண்டியது தான்.
பெற்றோர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் நான் சொல்ல விரும்புவது.
குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு வீட்டிலேயே திறந்த மனதோடு பேசப்பட வேண்டும்.
பெண்ணை மரியாதையாக பார்க்க வேண்டும் என்று உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும்.
காதல் பிழை இல்லை.
காதலுக்குப் பெயரிட்டு கட்டாயம் செய்வதுதான் வன்முறை.
சட்டம் மட்டும் இருந்தால் போதாது.பெண்ணில் உள்ள மனிதத்தைக் காணும் மனம் வரும்போதுதான் இது நின்றுவிடும்.
பெண்ணின் சுதந்திரத்தை குறைப்பதல்ல பாதுகாப்பு.
பெண்ணின் மேல் பார்வையை மாற்றுவதே பாதுகாப்பு.
ஒரு பெண் வெளியே செல்லும் நேரத்தை சரி என்று தீர்மானிக்கும் உரிமை சமுதாயத்துக்கு இல்லை.
அவளை பயமின்றி செல்ல அனுமதிக்கும் சூழலை உருவாக்குவது தான் சமுதாயத்தின் கடமை.
இந்தச் சம்பவத்துக்கு தொடர்புடைய மூன்று பேரையும் போலீசார் விரிவான விசாரணையின் பின்னர் கண்டுபிடித்து என்கவுண்டர் முறையில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்:
- கருப்பசாமி @ சதீஷ் (30)
- களீஸ்வரன் @ கார்த்திக் (21) – (சதீஷின் சகோதரர்)
- குணா @ தவசி (20) – (மதுரை மாவட்டத்திலிருந்து வந்த தூர உறவினர்)
இந்த மூவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி மற்றும் மதுரை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
போலீஸ் அதிகாரி திரு. சுந்தர் கூறிய தகவலின்படி,
சதீஷ் மற்றும் கார்த்திக்கிற்கு கொலை மற்றும் திருட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டு வழக்குகள் ஏற்கனவே இருந்துள்ளன.
மேலும், சதீஷ் மற்றும் கார்த்திக் சமீபத்தில் திருட்டு வழக்கில் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் இருந்து ஜாமீனில் வெளிவந்தவர்கள்.
காவல்துறையினர் இவ்வ மூவரையும் கோவை துடியலூர் வெள்ளக்கினார் பகுதியில் கண்டுபிடித்தபோது,
அவர்கள் ஆயுதத்தால் தாக்க முயன்றதால், போலீசார் காலில் துப்பாக்கிச் சூடு செய்து கட்டுப்படுத்தினர்.
கருப்பசாமி மற்றும் குணா இருவரின் இரு கால்களிலும் காயம் ஏற்பட்டது.
களீஸ்வரன் ஒரு காலில் காயம் பெற்றார்.
மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் நண்பர் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில்,
மூவருக்கும் பாரதிய நீதிக் கோட்பாட்டின் (BNS) கீழ் கீழ்க்கண்ட பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன:
Section 296B
Section 118 (1)
Section 324 (4)
Section 140 (3)
Section 309 (4)
பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அதிகாரப்பூர்வ அறிக்கை பெற்றபின், இந்த மூவருக்கும் Section 70 கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
மாணவியும், அவரது நண்பரும் தற்போது வேறு வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாணவிக்கு மனநலம் ஆலோசனை (Counselling) வழங்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனம், சில நாட்களுக்கு முன் கோவில்பாளையம் காவல் நிலைய வரம்பில் திருட்டு புகார் செய்யப்பட்ட வாகனமாக இருப்பது உறுதியாகியுள்ளது.
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.