நடத்துனர்களே, போலீஸ்காரர்கள் மாதிரி நடந்து கொள்ளாதீர்கள் !
தமிழ் நாட்டின் மூத்த படைப்பாளி சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு அரசு பஸ்ஸில் ஏற்பட்ட அவமரியாதையை வன்மையாக கண்டிக்கிறேன். அவரிடம் திமிராக நடந்து கொண்ட அந்த நடத்துநர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எழுத்தாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக வழங்கப்பட்டுள்ள கட்டணமில்லா பயண அட்டையில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1. குளிரூட்டப்பட்ட பேரூந்துகள் தவிர்த்து மற்ற அனைத்து பேரூந்துகளிலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
2. ஒவ்வொரு முறை பயணம் செய்யும் போதும் நடத்துநரிடம் காண்பித்தால் போதுமானது.
3. தமிழ் ஸ்காலர்(தமிழறிஞர்).
இவ்வளவு விபரம் இருந்தும் சில நடத்துனர்கள் அட்டையை கையில் வாங்கி படிக்காமல் பார்த்த உடனேயே இது செல்லாது என்று கூறுவது.திமிராகப் பேசுவது.அலட்சியமகப் பதில் அளிப்பது .
தமிழ் வளர்ச்சித்துறை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் 16000 ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு செலுத்தித்தான் இந்த சலுகையை வழங்கியிருக்கிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லை சில நடத்துனர்களுக்கு. எல்லா நடத்துனர்களும் இப்படி நடந்து கொள்வதில்லை. ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு தனியார் பேருந்துக்கு பத்து நிமிடம் டைம் விட்டுக் கொடுக்கும் சில சில்லறைகளே இப்படி நடந்து கொள்கிறார்கள்.
எனக்கு இது மாதிரி பல தடவை நடந்திருக்கிறது. மிக கடுமையாக வாதம்பண்ணி உணர வைத்திருக்கிறேன். அதன் பிறகும் விடமாட்டேன். அதிகாரிகளுக்கு புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வைப்பேன். சிலர் தன் தவறுகளை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள்.

குறிப்பு:
போக்குவரத்து துறைச் செயலர் அவர்கள் நடத்துனர் அனைவருக்கும் ஒரு தெளிவான சுற்றறிக்கை அனுப்பி எத்தனை விதமான கட்டணமில்லா பிரயாண அட்டைகள் இருக்கின்றன. அவைகளுக்கான சட்டதிட்டங்கள் என்னென்ன எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பாஸ் இவைகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
நடத்துனர் வைத்திருக்கிற டிக்கெட் கொடுக்கிற மிஷினில் அட்டையில் உள்ள நம்பரை தட்டினால், இது எந்த வகையான அட்டை போன்ற அனைத்து விபரங்களும் சட்ட திட்டங்களும் வந்து விடும்.அதை தட்டிப் பார்க்க வருத்தம்.
தயவு செய்து நடத்துனர்களே நீங்கள் போலீஸ்காரர்கள் மாதிரி நடந்து கொள்ளாதீர்கள். போக்குவரத்து துறை என்பது நேரடியாக மக்களிடம் தொடர்புள்ள ஒரு துறை. உங்களுடைய சர்வாதிகாரப் போக்கு மக்களை மட்டும் பாதிப்பதில்லை. ஆளும் அரசாங்கத்தையும் பாதிக்கும்.
— சோ.தர்மன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.