ரூ.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு சாலைப்புதூர் டோல்கேட் வழியாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவையடுத்து எஸ்.பி. தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். குளிர்பானங்கள் ஏற்றி வந்த அந்த லாரியில் குளிர்பானங்களுக்கு கீழ் பகுதியில் 30 மூட்டைகள் இருந்தன. அவற்றை எடுத்து பார்த்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.4.50 லட்சமாகும்.
இதையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தியதாக ஆறுமுகநேரி அருகே ராஜமணியபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜகுரு(39), எட்டயபுரம் அருகே தாப்பாத்தியைச் சேர்ந்த ரவிக்குமார்(21), ஈரோட்டைச் சேர்ந்த கோபிநாத்(31), வாகன ஓட்டுநர் ஈரோடு நாசினூரைச் சேர்ந்த முருகேசன்(43) ஆகிய 4 பேரை கைது செய்து, 30 மூடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு புகையிலை பொருட்களை கொண்டு சென்றும், அங்கிருந்து தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கொண்டு செல்வது தெரியவந்தது. அதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாரி ஆகியவற்றை கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மணிபாரதி