திமுகவுக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்த காங்கிரஸ் !
தமிழ்நாடு ஏழாவது சட்டமன்றத் தேர்தல் மே 28, 1980 அன்று நடைபெற்றது. எம்.ஜி.ராமச்சந்திரன் தலைமையிலான ஆட்சியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே கலைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடைபெற்றது.
1977இல் ஒன்றிய அரசில் பல கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா என்ற பெயரில் ஆட்சி அமைத்தது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யாமல், அந்த ஆட்சி கூட்டணிக் குழப்பங்களால் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு ஜனவரியில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. திமுக தலைவர் கருணாநிதி, “நேருவின் மகளே வருக….. நிலையான ஆட்சியைத் தருக” என்ற முழக்கத்தை முன்வைத்தார். இந்தக் கூட்டணி அமைந்தது குறித்துத் திமுக தலைமை செயற்குழுவில் கருத்து வேறுபாடுகள் மிகுந்ததாக இருந்தது.
கலைஞர் துணிந்து கூட்டணியை அமைத்து மக்களவையில் தமிழ்நாட்டில் திமுக 16 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் பாண்டிச்சேரி உட்பட 24 தொகுதிகளில் போட்டியிட்டது. திமுக போட்டியிட்ட 16 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த அதிமுக சிவகாசி, கோபிச்செட்டிபாளையம் என இரண்டு மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. ஒன்றிய அரசில் இந்திராகாந்தி பிரதமர் பொறுப்பை ஏற்றார். இதனையொட்டித் திமுக தலைவர், “எம்.ஜி.ஆர் அரசு மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது. அந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனையொட்டி அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே 1980 மே மாதம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இந்தச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தலா 117 தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுக்குப் பின் முதல் அமைச்சர் பெரும்பான்மை பெறுகிற கட்சிக்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதனால் கோபம் கொண்ட திமுக கலைஞரை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்றும் அறிவிக்க மறுத்தால் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற்றப்படும் என்று கொந்தளிப்பாக அறிக்கைகள் வெளிவந்தது. காங்கிரஸ் கட்சி ஒருபடி இறங்கி வந்து கூட்டணி வெற்றி பெற்றால் கலைஞர் முதல் அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்தக் கூட்டணி சுமார் 200 இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. தேர்தல் முடிவு திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுப்பதாக இருந்தது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக மட்டும் 129 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. திமுக 37 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பெற்றன. மற்றவை 3 இடங்களைப் பெற்றன.
1977இல் திமுகவிலிருந்து விலகிய நாவலர் நெடுஞ்செழியன் மதிமுக என்னும் மக்கள் திமுகவை என்னும் கட்சியைத் தொடங்கினார். 80 இல் அதிமுகவோடு இணைந்து நெடுஞ்செழியன் நிதி துறை அமைச்சரானார்.
1980இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கட்சியில் உயர்மட்டக் குழுவில் குழப்பங்கள் நிலவின என்றாலும் திமுக 16க்கு 16 என்று வெற்றியைத் தொடர்ந்து, அரசியல் சாணக்கியர் என்று கலைஞர் கட்சியினரால் போற்றப்பட்டார். ஆனால் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியாலும், கூட்டணி ஆட்சி என்று அறிவித்ததால் திமுக – காங்கிரஸ் – கூட்டணி படுதோல்வியைச் சந்தித்து மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிடமிருந்து திமுக நல்ல பாடங்களையும் கற்றுக்கொண்டது. தேர்தல் முடிவுகளை அடுத்து, திமுக – காங்கிரஸ் கூட்டணி உடனே கலைந்துபோனது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கலைஞர் இருந்தார். திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தங்களின் பாதைகளில் பயணத்தைத் தொடர்ந்தன. 1980 சட்டமன்றத் தேர்தலில் 2ஆவது முறையாக திமுக ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.
(அடுத்த இதழில் 1984 சட்டமன்றத் தேர்தல் இடம் பெறும்)
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.