அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்கள் ! கேள்வி எழுப்பும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் ! !
எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் அரசின் பல்வேறு துறைகளில் ஆலோசகர் நியமனங்கள் நடைபெறுவதாகவும்; பெரும்பாலும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அந்தப் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுவருவதாகவும்; இது இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கு எதிரானதாக அமைந்திருப்பதாகவும் கவலை தெரிவித்து, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கு.வெங்கடேசன் மற்றும் செயலர் சு.ஹரிசங்கர் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழ்நிலையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டே, அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆரம்பகால கட்டத்தில், சில துறைகளில் மட்டுமே இருந்த இத்தகைய ஆலோசகர்கள் நியமனங்கள் தற்போது அனைத்துத் துறைகளிலும், புற்றீசல் போல பல்கிப் பெருகி விட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் இவ்வாறான நியமனங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்தது என்றாலும், பெரும்பாலும் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், தற்போது ஆலோசகர்களின் நியமனங்கள் எந்தவித வரைமுறையும் இன்றி செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல இவர்களின் ஊதிய நிர்ணயத்திற்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை.

இதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில், தற்காலிக ஆலோசகர் பதவியில் மாதம் ரூ.1.00 இலட்சம் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிவதற்கு தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் பதவி நிலைக்குக் குறையாத பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன என்ற பத்திரிக்கைச் செய்தியினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு முதற்கண் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இத்தகைய ஆலோசகர்கள் நியமனத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கவலையுடன் பின்வரும் விடயங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வருகிறோம்.
* 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை இந்திய அரசியலமைப்பின் மூலமாக பாதுகாத்து நடைமுறைப்படுத்திவரும் தமிழ்நாட்டில், இந்திய அரசியலமைப்பின் அங்கமான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரசுப் பணிக்குத் தேர்வாகி, பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் திறமையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆலோசகர்கள் மூலமாக அரசு நிர்வாகத்தினை நடத்துவது என்பது ஏற்புடையதல்ல.
* களத்தில் நின்று, மக்களோடு மக்களாக சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் பணியாளர்களின் உழைப்பினை புறந்தள்ளிவிட்டு, ஆலோசகர்களின் அறிவுரையின்படி அரசின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் போக்கு என்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
* ஒன்றிய அரசு, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இணைச் செயலாளர், துணைச் செயலாளர், இயக்குநர் நிலையில் 45 பணியிடங்களை இடஒதுக்கீட்டினை மறுதளித்து, சமூக நீதிக்கு எதிராக நிரப்ப எத்தனித்தபோது, தமிழ்நாடு அரசு அதனை எதிர்த்து குரல் கொடுத்து தடுத்து நிறுத்திவிட்டு, மாநில அரசில் எந்தவித சலனமுமின்றி ஆலோசகர்கள் நியமனங்களை பன்மடங்கு அதிகரித்திருப்பது என்பது திராவிட மாடலுக்கு எதிரான நடவடிக்கையாகும்.
* நிபுனத்துவம் தேவைப்படும் நேர்வுகளில் ஆலோகர்களை நியமிப்பது என்ற வாலாய நடைமுறை கைவிடப்பட்டு, ஒவ்வொரு துறைகளிலும் கணக்கிலடங்கா நியமனங்கள் சமீபகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நியமிக்கப்படும் ஆலோசகர்கள் சர்வதேச அளவில், சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதற்கான பயிற்சி பெற்று, பல்வேறு முதலாளித்துவ நிறுவனங்கள் மூலமாக பல்வேறு வழிகளில் மாநில அரசில் உட்புகல்போக்கு என்பது மிகவும் அபாயகரமானதாகும்.
* தற்போது தமிழ்நாடு அரசில் காலியிடங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 3.5 இலட்சத்திற்கும் மேலுள்ள சூழ்நிலையில், இதைப்போன்ற ஆலோசகர்களின் நியமனங்கள், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அரசு நிர்வாகத்தினை நடத்துவதற்கு மறைமுகமாக உதவிக் கொண்டிருக்கிறது. இப்போக்கு நீடித்தால், இளைய சமூகத்தின் அரசு வேலை என்ற கனவினை சீரழித்துவிடும்.
* சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையில் ஓய்வு பெற்ற அலுவலரை தற்காலிக ஆலோசகர் பதவியில் நியமனம் செய்வது என்பது, தலைமைச் செலயகப் பணியாளர்களின் தரத்தினை குறைத்து மதிப்பிடுவதோடு, தலைமைச் செயலகப் பணியாளர்களின் மாண்பினையும் செயல்பாட்டினையும் குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகவும் ஊழியர் விரோத நடவடிக்கையாகவும் சங்கம் பார்க்கிறது.
* இதைப்போன்ற ஆலோசகர்கள் பதவிகளுக்கு ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதன் மூலமாக, அரசின் உயர் பதவிகளில் விளிம்பு நிலை-அடித்தட்டு மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவதோடு, சமூக நீதியும் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினையே அப்புறப்படுத்திவிட்டு, அரசுப் பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நிறுவனத்தினை ஒப்பந்தப்புள்ளி மூலமாக அமர்த்துவதற்கு வழிமுறைகளைக் கண்டறிவதற்கான குழுவானது மனிதவள மேலாண்மைத் துறையால் அரசாணை எண் 115-நாள் 18.10.2022ல் அமைக்கப்பட்டதை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது, அதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் உடனடியாகத் தடுத்து நிறுத்தினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், குறிப்பாக பழைய ஓய்வூயதித் திட்டம் அமல் என்பது நிறைவேற்றப்படாத சூழ்நிலையிலும் முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்ட சரண் விடுப்புச் சலுகை பறிப்பு போன்றவற்றாலும் அரசு ஊழியர்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பதையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கொண்டு வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியில், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினையும் சமூக நீதியினையும் காத்திடும் பணியில் சமரசம் ஏதுமின்றி செயலாற்றி வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆலோசகர்கள் நியமனங்களை முற்றிலுமாக கைவிட ஆணையிட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேற்சொன்ன காரணிகளை சீர்தூக்கிப் பார்த்து தமிழ்நாடு அரசிற்கும் அரசு ஊழியர்களுக்குமான நல்லுறவினை பேணிப் பாதுகாத்திடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்ற பணியாளர்களை எந்தவகையிலும் எந்த நிலையிலும் மீண்டும் அரசுப் பணியில் பணியமர்த்துவதையும் ஏற்கனவே இதைப்போல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு துறைகளில் ஆலோசகர் போன்ற பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப் பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்கவும் ஆலோசகர்கள் பணியிடங்களில் அரசுத் துணைச் செயலாளர் நிலையில் நிரந்தரப் பணியிடங்களை புதியதாக உருவாக்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.