கூலி படத்தில் நடிக்க முதலில் நான் ஓகே சொல்லவில்லை கூலி குறித்து நாகார்ஜுனா!
வேட்டையன் திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக இத்திரைப்படத்தில் நாகார்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில் படக்குழுவினர் விருவிருப்பாக புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் ‘கூலி’ படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசியிருந்த நாகார்ஜுனா, நான் இதுவரை நடித்த படங்களில் நல்ல கேரக்ட்டர் உடைய கதாபாத்திரங்களைத் தான் தேர்வு செய்து நடித்திருக்கிறேன். அது கொஞ்சம் போர் அடித்ததால்தான் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நான் ஓகே சொல்லவில்லை. அதனால் லோகேஷ் கனகராஜ் 7, 8 முறை நேரில் சந்தித்து என்னிடம் பேசினார். ஆரம்பத்தில் எனக்கு தயக்கம் இருந்தாலும் பிறகு கதாபாத்திரம் பிடித்திருந்தால் ஓகே சொல்லிவிட்டேன்.
ரஜினி சாருடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் தமிழில் வசனங்கள் பேசும்போது அவர் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய அனுபவம் மிகச்சிறந்த ஒன்று. நான் இந்தப் படத்தில் நெகடிவ் ஆன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பாஸிட்டிவான அனுபவத்தையே எடுத்துக்கொள்கிறேன்” என்று நாகார்ஜுனா கூறினார்.
— மு. குபேரன்