சொந்த தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் !
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ராஜப்பா நகரில் பொதுமக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து இருதயபுரம் கூட்டுறவு வங்கி லிட் கிளையை புதிதாக தொடங்கி வைத்து 92 பேருக்கு ஒரு கோடியை 62 லட்சம் மதிப்பிலானகடன் உதவிகளை தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கியிருக்கிறார்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் கடந்த 1912 ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி முதல் 113 வருடமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த வங்கிகள் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்தும் உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் வைப்புகள் பெறப்பட்டும் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
2025 நிதியாண்டில் இவ்வங்கிகளில் 19 ஆயிரத்து 200 உறுப்பினர்களை கொண்டும் ரூ. 46 கோடி வைப்புகளை ஈட்டியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும், இந்த கூட்டுறவு வங்கிகள் மூலம் நகைக்கடன், வீடு அடமானக்கடன், பணியாளர் கடன், வைப்புக் கடன், வீடு கட்டும் கடன், சிறு வணிகக் கடன், பணிபுரியும் மகளிர் கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன், கூட்டுபொறுப்பு குழு கடன் மாற்றுத்திறனாளிகள் கடன், தேசிய சேமிப்பு பத்திக்கடன், தாட்கோ , காம்போ, டெப் சிட்கோ போன்ற கடன்கள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனர். இதனை, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் கோரிக்கை வைத்தார்.
அதனைத் தொடர்ந்து புதிதாக திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ராஜப்பா நகரில் இருதயபுரம் கூட்டுறவு வங்கியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். கூட்டுறவு வங்கி லிமிடெட் எண்:919. 29-ம் தேதி (நேற்று) பதிவு செய்யப்பட்டது.
இந்த வங்கியின் புதிய கிளையில் காட்டூர் ராஜப்பா நகரில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 20 நபர்களுக்கு சிறுவணிகக் கடனும் மற்றும் வீடு அடமானக் கடனும் ரூ.133.75 இலட்சம், மேலும் 5 குழுக்களை சேர்ந்த 58 நபர்களுக்கு ரூ.29 இலட்சம் கடன் என மொத்தமாக 92 நபர்களுக்கு ரூ.1.62 கோடி கடன் வழங்கப்பட்டது.
மேலும், அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் ரூ 600 உறுப்பினர் சேர்க்கை கட்டணம் செலுத்தி 50 நபர்கள் தங்களை இவ்வங்கியில் உறுப்பினர்களாக சேர்ந்துக் கொண்டு ரூ.27 இலட்சம் வைப்புகள் செலுத்தியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 289 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்கள் வழியாக 01.04.2025 முதல் தற்போது வரை ரூ.1402.44 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பயிர் கடனாக 21ஆயிரத்து 663 நபர்களுக்கு 206.21 கோடியும், கால்நடை பராமரிப்பு கடனாக 8 ஆயிரத்து 862 நபர்களுக்கு 42.45 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
திருவெறும்பூர் தொகுதியில் 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்கள் மூலம் 01.04.2025 முதல் நாளது தேதி வரை 272 நபர்களுக்கு 151.03 இலட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில், திருச்சி கலெக்டர் சரவணன், திருச்சி மண்டல மூன்றின் தலைவர் மதிவாணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ஜெயராமன், சரக துணை பதிவாளர் முத்தமிழ் செல்வி, கூட்டுறவு சார்பதிவு பதிவாளர் அறிவழகன், செயலாளர் சுமித்ரா, வங்கி பொது மேலாளர் ஜென்சி மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகளும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது :
நான்கு வருடமாக ஆட்சி செய்து வரும் பல்வேறு துறை அமைச்சர்கள் சந்தித்து பொது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பேசி வருவதாகவும் அதுபோல் காட்டூர் பகுதிக்கு புதிதாக கூட்டுறவு வங்கி வேண்டுமென கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் கோரிக்கை வைத்ததாகவும் புதிதாக தொடங்குவதற்கு கால தாமதமாகும். ஆனால், விவசாய தேவைக்கு தற்பொழுது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கெனவே துவாக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு நமக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. தற்பொழுது நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவதற்கு அனுமதி கோரியிருக்கிறோம்.
அதே போல் இந்த பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கு வேளாண் துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். இதுபோன்று தொகுதியின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு துறை அமைச்சர்களையும் சந்தித்து நமக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம்.
திருவெறும்பூர் தாலுகாவில் நீதிமன்றம் அமைப்பதற்கு புதிய இடம் பார்த்து பார்த்து வருகிறோம். அதேபோல், திருவெறும்பூர் தொகுதியில் விளையாட்டு, கல்வி, சுகாதார என திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி முழு நிறைவு பெற்றதாக மாற்ற வேண்டும். நமது மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா அவரது நிதியில் ரூ2 கோடி நமது பகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கித்தருவதாக கூறியுள்ளார்” என்பதாக பேசினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.