தலைமை பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் K.V.நாகராஜன் என்பவருக்கு சொந்தமான வைத்திஸ்வரா ஆக்ஸிஜன் பிரைவேட் நிறுவனத்தில் வயலூர் சீனிவாச நகரை சேர்ந்த பொன்னசாமி மகன் சரவணன் என்பவர் எலெக்டிரிக்கல் சூப்பர்வைஸராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மேற்படி நிறுவனத்திற்கு கூடுதல் மின்னழுத்தம் தேவைபட்டதால், 175 KVA லிருந்து 200 KVA க்கு மின்னழுத்தம் மாற்றம் செய்ய கடந்த 07.11.2005ம் தேதி அப்போது திருச்சி மன்னார்புரம் மின்சார வாரியத்தில் கூடுதல் தலைமை பொறியாளராக பணிபுரிந்த ஆறுமுகம் என்பவரிடம் புகார்தாரர் சரவணன் மனு அளித்துள்ளார்.
மேற்கண்ட கூடுதல் தலைமை பொறியாளர் ஆறுமுகம் கூடுதல் மின்னழுத்தம் வழங்க முதலில் ரூ.10,000/-ம் லஞ்சமாக கேட்டு, அதில் முன் பணமாக ரூ.5000/-ம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு மேற்கண்ட சரவணன் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல், கடந்த 07.11.2005 ம் தேதி திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் DSPயிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த மனுவின் மீது DSP சுரேஷ்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது புகார்தாரர் சரவணனிடமிருந்து எதிரி ஆறுமுகம் லஞ்சப்பணம் ரூ.5000/-கேட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடித்து 18.06.2025ந்தேதி எதிரி ஆறுமுகம்,(77/2025) முன்னாள் கூடுதல் தலைமை பொறியாளர்/கண்காணிப்பு பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம், திருச்சி என்பவருக்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-ன்படி 1 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10000/-ம் அபராதமும் மற்றும் பிரிவு 13(2) r/w 13(1)(d) 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் அபராதம் ரூ.10000/-விதித்தும், தண்டனையை ஏகபோக காலத்தில் அனுபவிக்குமாறும், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நிதீபதி திரு.புவியரசு அவர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் துணைக்கண்காணிப்பாளர் மணிகண்டன் அவர்கள் சாட்சிகளை ஆஜர் செய்தும், சிறப்பு அரசு வழக்குரைஞர் திரு.கோபிகண்ணன் அவர்கள் ஆஜராகி தண்டணை பெற்றுதர உதவி புரிந்துள்ளார்கள்.