டி.என்.ஏ. சயின்ஃபிக்ஷன் படமா? ஆக்ஷன் க்ரைம் த்ரில்லரா?
வந்தவாசி தொகுதி தி.மு.க.எம்.எல்.ஏ. அம்பேத்குமாரின் ‘ஒலிம்பியா மூவிஸ்’ பேனரில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து இந்த ஜூன்.20-ஆம் தேதி ரிலீசாகிறது ‘டி.என்.ஏ. நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், மானசா செளத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், சுப்பிரமணிய சிவா, ரித்விகா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : பார்த்திபன். ஸ்ரீகாந்த் ஹரிகரன், சகி சிவா, பிரவீன் சைவி, சத்யபிரகாஷ், அனல் ஆகாஷ் ஆகிய ஐந்து அறிமுக இசையமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். பின்னணி இசை : ஜிப்ரான் வைபோதா. பாடல்களை கார்த்திக் நேத்தா, உமாதேவி, முத்தமிழ் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் பண்ணுகிறது.

அடுத்த வாரம் ‘டி.என்.ஏ.’ ரிலீஸ் ஆவதையொட்டி, நேற்று [ ஜூன்.11] படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு நிகழ்வு, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் மாரிசெல்வராஜ், ராஜு முருகன், கணேஷ் கே.பாபு, ஹேமந்த், மத்திய தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் தமிழ்நாடு அளவில் சாதனை படைத்த, கவிஞர் வெண்ணிலாவின் மகள்களான கவின்மொழி, நிலாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையில் இவர்கள் இருவரையும் கெளரவித்தார் அம்பேத்குமார் எம்.எல்.ஏ.
படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்தும் பாடல்கள் உருவான விதம் குறித்தும் ஐந்து பேரும் பேசினார்கள். இயக்குனர் நெல்சல் வெங்கடேசனின் கதை சொல்லல் குறித்தும், அவரது படங்களின் கதாபாத்திரங்கள் குறித்தும் பாடலாசிரியர்கள் மூவரும் சிலாகித்துப் பேசினார்கள்.

தன்னை சினிமா உலகிற்கு அடையாளம் காட்டிய அம்பேத்குமாரை நன்றியுடன் நினைவு கூர்ந்தார் இயக்குனர் கணேஷ் கே.பாபு. “நெல்சன் இயக்கிய படங்களிலேயே இந்தப் படம் வெகுஜன ஆதரவையும் வியாபார ரீதியிலான வெற்றியையும் பெறக்கூடிய படமாக நிச்சயம் இருக்கும்” என்றார் இயக்குனர் ராஜுமுருகன். “இயக்குனர் நெல்சனுக்கு அரசியலைப் பற்றி நல்ல புரிதல் இருக்கிறது. பொலிட்டிக்கல் எண்டெர்டெய்னர் படத்தை இயக்கும் திறமையும் அவரிடம் இருக்கு” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா.
தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான அம்பேத்குமாரின் மக்கள் பணிகளையும் சினிமாப் பணிகளையும் வெகுவாகப் புகழ்ந்தனர் கவின்மொழியும் நிலாபாரதியும். “இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதில் என்னுடைய கேரக்டரான திவ்யா மிகவும் சவாலானது. ஹீரோ அதர்வா மிகத்திறமையான நடிகர். எல்லா ரசிகர்களுக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்” என்றார் ஹீரோயின் நிமிஷா.
“எங்களுடைய தலைமுறை இயக்குனர்களில் நெல்சன் தனித்துவமானவர். அவரின் படைப்புகளில் சமூக பொறுப்புணர்வு தெரிகிறது. சட்டுன்னு மக்களுக்கு தென்படாத கேரக்டர்களை திரையில் கொண்டு வருகிறார். மனிதத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர்களும் மனிதத்தை மதிக்காதவர்களும் வாழும் இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ்வது என்பதையும் அதற்குள் நாம் எப்படி சிக்கியிருக்கோம் என்பதையும் இந்தப் படத்தில் சொல்லியுள்ளார் நெல்சன். படத்தின் நடிகர்—நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.
ஹீரோ அதர்வா
“படத்தின் கதையை நெல்சன் சொல்வதற்கு முன்பே தயாரிப்பாளர் அம்பேத்குமார் சொல்லிவிட்டார். அதன் பிறகு நெல்சன் , டி.என்.ஏ.என்ற தலைப்பையும் சொன்னார். ‘டி.என்.ஏ.’ன்னு சொன்னதுமே ஏதோ சயின்ஃபிக்ஷன் படமோ இருக்குமோன்னு நினைச்சேன். ஆனால் நெல்சனோ டி.என்.ஏ.ன்னா திவ்யா & ஆனந்த் என்பதையும் ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் கதையையும் சொன்னார். நான் தான் ஆனந்த், நிமிஷா தான் திவ்யா. படத்தின் கதை, மற்ற கேரக்டர்கள் எல்லாம் முடிந்து இரண்டே மாதத்தில் ஷூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார் அம்பேத்குமார். அதற்கேற்ப பக்காவாக பிளான் போட்டிருந்தார் டைரக்டர் நெல்சன். என்னுடைய சினிமா பயணத்தில் இது சிறந்த படமாக இருக்கும், ரசிகர்களுக்கும் சிறந்த படம் பார்த்த திருப்தி கிடைக்கும்” என்றார்.

கடைசியாக பேசிய இயக்குனர் நெல்சன், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, “என்னுடைய தயாரிப்பாளர் அம்பேத்குமார் சிறந்த மக்கள் பிரதிநிதி. தினமும் காலை வந்தவாசிக்குப் போய் மக்களைச் சந்தித்துவிட்டு, இரவு சென்னை திரும்பி சினிமாப் பணிகளைப் பார்ப்பார். நான் இரண்டு முறை வந்தவாசிக்குப் போன போது, தொகுதி மக்கள் இவர் மீது வைத்திருக்கும் மரியாதையையும் அன்பையும் நேரடியாகப் பார்த்தேன். அதர்வாவும் நிமிஷாவும் இல்லையென்றால் இந்த ‘டி.என்.ஏ.’ இல்லை. என்னுடைய முந்தையை படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, க்ரைம் ஆக்ஷன் டிராமாவாக இப்படம் இருக்கும்.
படத்தில் என்னுடன் பணியாற்றிய ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி. சினிமாவை நேசித்து, மக்களின் மனசறிந்து படங்களைத் தயாரிக்கும் அம்பேத்குமாரின் மக்கள் பணியும் சினிமாப் பணியும் சிறப்புடன் தொடர வேண்டும்” என்றார்.
— மதுரை மாறன்.