“என் அம்மா இப்போது இல்லையே” -’மனிதன் தெய்வமாகலாம்’ தயாரிப்பாளர் உருக்கம்!
‘வயோம் எண்டெர்டெய்ன்மெண்ட்’ பேனரில் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இதில் கதையின் நாயகனாக டைரக்டர் செல்வராகவன், கன்னட ஹீரோயின், குஷீ ரவி, சீனியர் நடிகை கெளசல்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ், உட்பட பலர் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு : ரவிவர்மா கே., இசை : ஏ.கே.பிரியன், எடிட்டிங் : தீபக், தமிழ்நாடு ரிலீஸ் : சக்தி பிலிம் ஃபேக்டரி, பி.ஆர்.ஓ. : ரேகா.
வரும் 10-ஆம் தேதி ‘மனிதன் தெய்வமாகலாம்’ ரிலீஸாவதால், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஏப்ரல்.02-ஆம் தேதி இரவு நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், கதிரேசன், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…
கதிரேசன், “இந்த மேடையில் டைரக்டர் டென்னிஸ் மஞ்சுநாத்தை தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மனம் திறந்து பாராட்டியதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. ஒரு தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்குமிடையே நல்ல புரிதல் இருந்தால் தான் அந்தப் படம் தரமானதாக இருக்கும்”.
தனஞ்செயன், “கார்ப்பரேட் கம்பெனியில் 30 ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் சதீஷ் சினிமாவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். அவர் வேலை பார்த்த ஏர்டெல் நிறுவனத்தில் தான் நானும் வேலை பார்த்தேன், அவருக்கு நான் சீனியர். கார்ப்பரேட் அனுபவம் இருப்பதால் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள், குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடித்துள்ளார் சதீஷ். இதான் இப்போதைய சினிமாவுக்குத் தேவை”.
நாயகன் செல்வராகவன், “இந்தப் படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன் ரிலீஸ் பண்ணுவது மிகவும் சிறப்பு. நல்ல கண்டெண்ட் உள்ள படங்களைத் தான் வாங்குவார் சக்திவேலன். அதை மக்களிடம் பெரிதாக கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் வல்லவர். எனவே அந்த பேனரில் எனது படம் ரிலீசாவதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ஷூட்டிங் போனவுடனேயே யூனிட்டில் டைரக்டர் டென்னிஸ்மஞ்சுநாத் உட்பட எல்லோரும் ஓய்வில்லாமல் வேலை பார்த்தைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அவர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். அதே போல் தயாரிப்பாளர் சதீஷ் இந்தப் படத்தின் மீது பெரிதும் நம்பிக்கை வைத்து பெரிய சப்போர்ட்டாக இருந்தார். படவெற்றியின் மூலம் அவரின் நம்பிக்கையும் ஜெயிக்கும்”.
படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே படத்தின் சிறப்பு குறித்துப் பேசினார்கள்.
டைரக்டர் டென்னிஸ்மஞ்சுநாத், “ செல்வராகவனின் சினிமாக்களைப் பார்த்து இன்ஸ்பையராகி, டைரக்டராக வேண்டும் என எண்ணியவன் நான். ஆனால் இந்த மேடையில் அவருடனேயே இருப்பது மிகவும் பெருமை. அவர் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கேன். அவருக்கு ஒரு நாள் உடல்நலம் சரியில்லாத போது இரவுக் காட்சியை கேன்சல் பண்ணிரலாம்னு சொன்னேன். அதெல்லாம் வேண்டாம்பா, என்னால தயாரிப்பாளருக்கு எந்த சிரமமும் வரக்கூடாதுன்னு நடிச்சுக் கொடுத்துட்டுத் தான் போனார். இந்தப் படத்தில் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள், படத்தை ரிலீஸ் பண்ணும் சக்திவேலன் சார் ஆகியோருக்கு நன்றி”.
தயாரிப்பாளர் சதீஷ், “என்னை திரையில் பார்க்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஆனால் இப்போது அவர் என்னுடன் இல்லை. முப்பது ஆண்டுகள் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்ததால் சினிமாப்பக்கம் வரமுடியவில்லை. கிடாரி படத்தில் எனக்கு சின்ன கேரக்டர் கொடுத்த சசிகுமார் சாருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாராகியுள்ள இப்படம் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம். எங்களின் முயற்சிக்கு மீடியாக்கள் பேராதரவு தர வேண்டும்”.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.