கோவில் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சோகம் !
விருதுநகர், ஆமத்தூர், அருகே காரிசேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் நேற்று 45 வது நாள் மண்டல பூஜைக்காக மைக் செட் மற்றும் லைட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. மைக் செட் அமைக்கும் பணியில் அதே ஊரைச் சேர்ந்த திருப்பதி என்பவர் ஈடுபட்டிருந்தார்.

சம்பவத்தின் போது லைட் இணைப்பிற்காக வயரை இழுக்கும்போது, எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பியில் வயர் உரசியதால் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் மைக்செட் உரிமையாளர் திருப்பதி (28) மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லலிதா (25) திருப்பதியின் பாட்டி பாக்கியம் (65) மேலும் 5 நபர்கள் காப்பாற்ற முயன்ற போது அவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் திருப்பதி, மனைவி லலிதா, பாட்டி பாக்கியம், ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உயிரிழந்த தம்பதிக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் லலிதா தற்போது 7 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.

மேலும், திருப்பதியை காப்பாற்ற முயன்ற அவரது உடன் பிறந்த சகோதரர் தர்மர் 20, மற்றும் உறவினர் கவின்குமார் 17 ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், சம்பவ இடத்தை காவல்துறை, வருவாய்த்துறை, மற்றும் மின்சாரத் துறையினர், நேரில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.