ஒரு காலத்தில் போட்டோஷாப்பில் புகைப்படங்களை மார்பிங் செய்வது மோசடிகளுள் ஒன்றாக இருந்தது. அது இன்றைய ஏ.ஐ. காலத்தில், உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. நாம் பேசாததை பேசியது போலவும்; நாம் செய்யாததை செய்தது போலவும் காட்டுவது மிக எளிதாகிவிட்டது.
அவ்வாறு நமது முகம், குரல், உடல் அசைவுகளை கொண்டு போலியாக உருவாக்கப்படும் வீடியோ மற்றும் ஆடியோக்களைத்தான் டீஃபேக் மோசடி என்று வகைப்படுத்துகிறார்கள்.
ஆபாச உரையாடல், புகைப்படங்களாக மட்டுமல்லாமல்; போலீசு அதிகாரி பேசுவது போல, வங்கி அதிகாரி அழைப்பது போல கூட தற்போது டீஃபேக் மோசடி பரவலாக பரவி வருவதாக எச்சரிக்கிறார்கள் சி.பி.ஐ. போலீசார்.
இதுபோல, அனுப்பி வைக்கப்படும் வீடியோ அல்லது வீடியோ கால் அழைப்புகளை கையாளும்போது, பேசும் நபர்களின் கண் சிமிட்டல், அவர்களின் உதட்டின் அசைவுகள், அவர்களது முகம், காது அருகே உள்ள ஒழுங்கற்ற ஓரங்கள் ஆகியவற்றை உண்ணிப்பாக கவனித்து அது உண்மையான வீடியோவா? அல்லது டீஃபேக் வீடியோவா என்பதை சரிபார்க்க வேண்டும்.
அடுத்து, இதுபோன்ற வீடியோ கால் அழைப்புகளின் வழியே போலீசார் விசாரணை அல்லது வங்கி அதிகாரிகளின் விசாரணைகள் ஒருபோதும் நடைபெறுவதில்லை. அவ்வாறு அழைத்தாலும், நேரில் வருகிறேன் என்பதாக சொல்லி துண்டித்துவிடுவதே சரியானது எனவும் சொல்கிறார்கள் சைபர் கிரைம் போலீசார்.
இதுபோன்ற மோசடி வீடியோக்களை உருவாக்குவதற்கு தேவையான கச்சாப் பொருட்களை, நமது சமூக வலைத்தள கணக்குகளில் நாமே பகிரும் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ பதிவுகளிலிருந்தே உருவாக்குகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு தனிப்பட்ட விவரங்களை பொது வெளியில் பதிவிடுவதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்கிறார்கள்.
ஒருவேளை மோசடி நபர்களிடம் ஏமாந்துவிட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணில் அல்லது cybercrime.gov.in. என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யுங்கள். அருகாமையிலுள்ள சைபர் கிரைம் போலீசாரை அணுகுங்கள் !
தீயாய் பரவும் டீஃபேக் மோசடி ! உஷார் !
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.