அவமதிக்கப்பட்ட அம்பேத்கர் சிலை ! தேர்தல் நேரத்தில் இது தேவையா ?
தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமல், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும் போலீசாரும் முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், உள்ளூர் பகையை மனதில் வைத்துக் கொண்டு மாற்று சமூகத்தினரை பழிவாங்கும் நோக்கில் அம்பேக்கர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரணகுப்பம் கிராமத்தில், ஏற்கனவே கடந்த வாரம், இப்பகுதியில் உள்ள ஆதி திராவிடர் சுடுகாட்டில் மாற்று சமூகத்தினர் அத்துமீறி பிணம் புதைத்ததோடு, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றின் பைப்புகளையும் உடைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்தான், மர்ம ஆசாமிகள் அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த சம்பவமும் அரங்கேறியது. அம்பேத்கர் சிலையை அவமதித்திருப்பது, ஜாதி வன்முறையைத் தூண்டும் சதி என்றும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்றும் ஆதிதிராவிடர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில், இது போலீசாருக்கு பெரும் தலைவலி பிடித்த விவகாரமாகியது.
இந்த பின்னணியில்தான், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் தலைமையில், பர்கூர் சிறப்பு புலனாய்வு பிரிவு, ஊத்தங்கரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அங்குள்ள சிசிடிவி, காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான் போலீசாருக்கே அந்த அதிர்ச்சி காத்திருந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அம்பேத்கர் சிலையை அவமதித்த பைரவன் (42), அண்ணாதுரை (52) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கெனவே, இடுகாடு பிரச்சினையில் மாற்று சமூகத்தினரிடையே மோதல் போக்கு எழுந்த நிலையில், அதற்கு பழிவாங்கும் நோக்கில், இந்த காரியத்தை அவர்கள் செய்திருப்பதும் விசாரணையில் அம்பலமானது. காரணம், கைது செய்யப்பட்ட இருவரும் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கல்லாவி போலீசார், ஊத்தங்கரை கிளைச் சிறையில் அடைத்தனர். சாதிய ரீதியில் பதட்டத்தை உண்டாக்கிய இந்த விவகாரத்தில் அறிவியல் அடிப்படையிலான, ஆதாரங்களின் அடிப்படையில் உண்மை குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சமூக பதட்டத்தை தணித்த போலீசாரின் நடவடிக்கை கவனத்தை பெற்றிருக்கிறது.
— மித்ரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.