கலெக்டரிடம் மனுவை வீசி எரிந்த பெண்!
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, அரசு புறம்போக்கு நிலத்தை அதிமுக பிரமுகர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த நிலத்தில் கல்யாண மண்டபம் கட்ட அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.
குறிப்பாக நதிக்குடி வருவாய் கிராமத்தில் உள்ள நத்தம் சர்வே எண் 1706/1 — அரசு புறம்போக்கு காலியிடத்தில், அதிமுக பிரமுகர் ஒருவர் சட்டத்துக்கு புறம்பாக வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வருவதாகவும், இதை அப்புறபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான கட்டிடம் அமைப்பதற்கு ஊராட்சியின் கனிம வள நிதியின் மூலம் கல்யாண மண்டபம், கழிவறை உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, வெம்பக்கோட்டை வட்டம் கொங்கன்குளம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” நிகழ்ச்சியில், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்பவா் பொதுமக்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா அவர்களிடம் சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக ஆவேசமாக பேசி கையில் வைத்திருந்த மனுக்களை வீசி கண்டனத்தை பதிவு செய்தார்.
அந்த சம்பவம் நடந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததைப் பற்றி பெண் கலெக்டரிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசும் காட்சி பதிவாகியுள்ளது.
— மாரீஸ்வரன்









Comments are closed, but trackbacks and pingbacks are open.