தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 1996
தமிழ்நாட்டின் 11 ஆவது சட்டமன்றத் தேர்தல் 1996 மே 2 அன்று நடைபெற்றது. 234 இடங்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையில் கருப்பையா மூப்பனாரின் தமிழ்மாநிலக் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் கண்டது. திமுக – 173; தமாக – 39; சிபிஐ – 8; பார்வேடு பிளாக் – 1 ஆகிய இடங்களை பிடித்தன. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி 4ஆவது முறையாக முதலமைச்சரானார் .
1991 தேர்தல்களில் வெற்றிபெற உதவிய இந்தியத் தேசியக் காங்கிரசுடனான கூட்டணியை ஜெயலலிதா முறித்துக் கொண்டார். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போதைய பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான தேசிய தலைமை, அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்தது. தமிழ் மாநில காங்கிரஸில் இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஜி.கே.மூப்பனார் தலைமையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக காரணமாகியது.

தமிழ் மாநில காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை அறிவித்தார். அவரது ஏராளமான ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் திமுக முன்னணிக்காகப் பிரச்சாரம் செய்தனர். சன் டிவியில் பரவலாகப் பார்க்கப்பட்ட பிரச்சார நிகழ்ச்சியில் , “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளால் கூடத் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது” என்று அவர் அறிவித்தார். ரஜினிகாந்தின் ஆதரவு திமுகவுக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்தது.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதிமுக, சிபிஎம். ஜனதா தளம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அதிமுக, இந்தியத் தேசியக் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. பாட்டாளி மக்கள் கட்சியும் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
திமுக – தமிழ் மாநிலக் காங்கிரஸ் கூட்டணி 221 இடங்களில் அமோக வெற்றி !
அதிமுக வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி ! தேசிய காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட ஜெயிக்கவில்லை.
முதல்வராக ஜெயலலிதா பர்கூரில் தோல்வியடைந்தார்.
புதிதாகப் போட்டியிட்ட மதிமுக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை
ஜெ. தலைமையிலான அதிமுக, இந்தத் தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. 1967 இல் எம்.பக்தவத்சலத்திற்குப் பிறகு தேர்தலில் தோல்வியடைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா என்ற வரலாறு உருவானது.
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்தியத் தேசியக் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. திமுக – தமாக கூட்டணி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு குரல் என்னும் பெரும் புயல் காற்றில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது.
இதனை தொடர்ந்து, மு.கருணாநிதி தலைமையில் அமைந்த அமைச்சரவையில், கே. அன்பழகன், ஆற்காடு என். வீராசாமி, நாஞ்சில் கே. மனோகரன், கோ. சி. மணி, வீரபாண்டி எஸ். ஆறுமுகம், துரைமுருகன், கே. பொன்முடி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். அதிக அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையாகவும் புதிய வரலாற்றை பெற்றது.
– ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.