13 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த திமுக ! காலப் பெட்டகம் – பாகம் 08
காலப் பெட்டகம் - பாகம் 08
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 1988
டிசம்பர் 1987 இல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு, அதிமுக எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி – ஜெயலலிதா தலைமையில் இரண்டாக பிளவுபட்டதையும்; வி.என்.ஜானகி முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த நிலையில், அவரது ஆதரவாளரான பி.எச். பாண்டியன் சபாநாயகராக இருந்த நிலையில், கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான சர்ச்சையை தொடர்ந்து ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை கடந்த தொடரில் பார்த்தோம்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தல் ஜனவரி 21, 1989 அன்று நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு. கருணாநிதி மீண்டும் முதலமைச்சரானார்.
இந்த தேர்தலின்போது, அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் தங்களை அதிகாரப்பூர்வ அதிமுக என்று கூறிக் கொண்டு, அதிமுகவின் “இரட்டை இலை” சின்னத்தைத் தங்களுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன. இருப்பினும், தேர்தல் ஆணையம் அவர்களில் யாரையும் அதிகாரப்பூர்வ அதிமுகவாக அங்கீகரிக்க மறுத்து, டிசம்பர் 17, 1988 அன்று “இரட்டை இலை” சின்னத்தைத் தற்காலிகமாக முடக்கியது. அதற்குப் பதிலாக ஜெயலலிதா அணிக்கு “சேவல்” சின்னத்தை வழங்கியது, அதே நேரத்தில் ஜானகி அணிக்கு “இரட்டைப் புறாக்கள்” சின்னம் வழங்கப்பட்டது.
இந்தத் தேர்தல் தேசிய அளவில் வழக்கத்திற்கு மாறாக அதிகக் கவனத்தை ஈர்த்தது. ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைப்பதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக்கட்சியை தொடங்கினார், நடிகர் சிவாஜி கணேசன். நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகு, 12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் (ஜி.கே.மூப்பனார் தலைமையில்) தனியாகத் தேர்தலில் போட்டியிட்டது. ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்குப் பல பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டு விரிவாகப் பிரச்சாரம் செய்தார். ஜனதா தளம் மற்றும் சிபிஎம் கட்சியின் தேசியத் தலைவர்களான வி.பி.சிங் மற்றும் ஜோதி பாசு ஆகியோர் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான முன்னணிக்காகப் பிரச்சாரம் செய்தனர்.
1989 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக, மார்க்சிஸ்ட் கட்சி, ஜனதா தளம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதிமுக (ஜானகி அணி) தமிழக முன்னேற்ற முன்னணியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. அதிமுக (ஜெயலலிதா அணி) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சி, பாண்டியன் தலைமையில் இயங்கி வந்த இந்திய ஐக்கியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி சட்டமன்றத் தொகுதிகள் தவிர்த்து 232 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையை உறுதி செய்தது. வி.என்.ஜானகி அணியில், பி. ஹெச். பாண்டியன், பி.புதூர் சீனிவாசன் ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணியும் படுதோல்வி கண்டது. நிறைவில், கருணாநிதி 3- வது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் முறையாக, எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா சபைக்குள் அமர்ந்தார்.
கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில், பேராசிரியர் க. அன்பழகன், நாஞ்சில் க. மனோகரன், வீரபாண்டி எஸ். ஆறுமுகம், துரைமுருகன், கே. பொன்முடி, கே.என். நேரு, சுப்புலட்சுமி ஜெகதீசன், கோ.சி. மணி, பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
அரசியல் களத்தில் படுதோல்வியைச் சந்தித்த ஜானகி அரசியலிருந்தே விலகினார். பிளவுபட்ட அதிமுக ஒன்றாக இணைந்தது. முடக்கி வைக்கப்பட்ட இரட்டை இலை மீண்டும் கிடைத்தது. 1989 மார்ச்சு மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக வெற்றி பெற்றது.
ஜனவரி 27 1989 அன்று பதவியேற்று, மகளிர் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்த திமுக அமைச்சரவை, சுமார் இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில், ஜனவரி 30, 1991 அன்று சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசால் கலைக்கப்பட்டது.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.