கொரோனா காலத்தில் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய செவிலியர் சம்பளம் இன்றி தவிக்கும் அவலம் !
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் , தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு.
எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்களின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து,பணி பாதுகாப்பும்,பணி நிரந்தரமும் வழங்கிட வேண்டும். எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் தினக்கூலி பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் RCH திட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். இது குறித்து இச்சங்கங்களின் சார்பில் இன்று திருச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் 2020 மார்ச் மாத உத்தரவு மூலம் , 3700 செவிலியர்களை ஒரு சில மாதங்களிலேயே நியமித்தது. 2019 ம் ஆண்டில் நடத்தப்பட்ட MRB தேர்வை எழுதி , தேர்ச்சி பெற்றவர்கள் தான் , இட ஒதுக்கீடு முறையில் ,உரிய சான்றிதழ் சரிபார்பிற்குப் பின் முறையாக பணிநியமனம் செய்யப்பட்டனர். எம்.ஆர்.பி தேர்வில் வெற்றி பெற்றிருந்த அந்த செவிலியர்களை , கட்டாயமாக பணியில் சேர்ந்தே ஆக வேண்டும் என வற்புறுத்தி பணியில் சேர்க்கப்பட்டனர்.
“மூன்று நாட்களில் பணியில் சேராவிட்டால் 2019 எம்.ஆர்.பி பட்டியலில் இருந்து நீக்கப்படுவீர்கள்,எதிர்காலத்தில் வேறு எந்த அரசு வேலையிலும் சேர்க்கப்பட மாட்டீர்கள் ” எனவும் அழைப்பாணை மூலம் மிரட்டப்பட்டனர்.அவர்களுக்கு, மாதத் தொகுப்பூதியமாக வெறும் ரூ 14,000 மட்டுமே வழங்கப்பட்டது. கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வெறும் ரூ 14000 தொகுப்பூதியம் என்பது வெட்கக் கேடான நடவடிக்கையாகும்.கடும் உழைப்புச் சுரண்டலாகும். அத்தகைய குறைந்த ஊதியத்துடன், கடுமையாக உழைத்தனர். ஒவ்வொரு நாளும் 12.00 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தனர். இச் செவிலியர்கள் கொரோனா நோயாளிகளுக்கு, மூன்று அலைகளிலும் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி அர்ப்பணிப்போடு சேவை செய்தனர். ஆயிரக்கணக்கான நோயாளிகளை காப்பாற்றினர். இரண்டரை ஆண்டுகளாக , தொடர்ச்சியாகஅதே 14,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் அவர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் , இச்செவிலியர்கள் 2,472 பேரையும், 31.12.2022 அன்று திடீரென்று பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது . இது மிகுந்த அதிர்ச்சியையும்,வருத்தத்தையும் , மன வேதனையையும் அளிக்கிறது. * எனவே, பணி நீக்க உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணி பாதுகாப்பு, பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். படிப்படியாக பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும். கடந்த 6 மாதகாலமாக அவர்களில் பெரும்பாலோருக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை. ஆறு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும்.
மருத்துவப் பணியாளர்கள் பணி நியமன ஆணையம் ( MRB) மூலம் நியமிக்கப் பட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் . அவர்களுக்கு ரூ 14000 முதல் 20,500 வரை தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. 12 மணி நேர வேலை வழங்கப்படுகிறது. இவ்வாறு பணி புரியும் ஏறத்தாழ 6000 செவிலியர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். # 2013 முதல் தினக்கூலியாக பணி புரியும் 2500 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
![சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்](https://angusam.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-08-at-12.03.32.jpeg)
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005 ஆம் ஆண்டு முதல் R.C.H. திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் , 3140 க்கும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1500 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. அவர்கள் நாள்தோறும் தொடர்ந்து பனிரெண்டு மணி நேரம் வேலை செய்கின்றனர். வார விடுமுறை ,அரசு விடுமுறை மற்றும் மருத்துவ விடுப்பு கூட இல்லாமல் பணி செய்ய வைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் , பட்டியலின சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும்,பெண்கள் என்பதும், பொருளாதார ரீதியில் வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத அவல நிலையில் உள்ளனர்.
பலர் நோயுற்றும்,பணியிலிருக்கும் போதும் உயிர் இழந்து விட்டனர். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால், மூன்று ஆண்டுகளுக்குமேலாகப் பணிபுரியும் இத்தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் (special time scale of pay) வழங்கும் அரசாணை 01.10.2010 அன்று (நிதி ஊதியப் பிரிவுத்துறையின் இந்த அரசாணை அ.ஆ.நிலை எண் 385 ),வெளியிடப்பட்டது. ஆனால் அவ்வாணை இதுவரை நடைமுறைப் படுத்தப் படவில்லை. எனவே, இவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.
2017 ல் அறிவிக்கப்பட்ட தினக்கூலி உத்தரவு, நிறைவேற்றப்படாததால், அதற்கான 150 கோடி நிலுவைத் தொகையும் வழங்கப் படவில்லை. அதை உடனடியாக வழங்கிட வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு , சிறப்பாக சேவை செய்த, எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த மருத்துவர்களையும் , செவிலிய உதவியாளர்களையும், பல்நோக்கு மருத்துவப் பணியார்களையும் ,இதர பணியாளர்களையும் பணி நீக்கம் செய்தது சரியல்ல. அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
மேலும் “ஒன்றிய அரசுடைய கொள்கை, ஒன்றிய அரசுடைய தேசிய சுகாதார இயக்கம் ” என்ற காரணங்களை கூறி, தமிழக அரசு, தனது செவிலியர் ,மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணி நியமனக் கொள்கையை முற்றிலும் கைவிடுவது ஏற்புடையது அல்ல. மாநில உரிமையை பறிகொடுப்பது சரியல்ல. நெக்ஸ்ட் தேர்வை திணிக்கக் கூடாது. நீட் தேர்விற்கான நேரடி பயிற்சியை ஏழை மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் . பீகார் மாநில அரசு போல் தமிழ்நாடு அரசும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
அனைத்து ஊரக, உள்ளாட்சி பகுதிகளிலும் மனித கழிவு அகற்றுவதை இயந்திர மயமாக்க வேண்டும். அதற்கான உபகரணங்களை மதுரை மாநகராட்சி போல் அனைத்து இடங்களிலும் வாடகைக்கு வழங்கப்பட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் ,இறையூரில் உள்ள வேங்கை வாசல் தெருவில் தலித்துகளின் குடிநீர் மேல் நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டச் சம்பவம் வன்மையாக கண்டிகத்தக்கது. குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கொரானா காலத்தில் மருத்துவ தேர்வுகள் கால தாமதமாக நடத்தப் பட்டன. எனவே, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுத , எப்போதும் உள்ளது போல் மார்ச் 31 தேதிக்கு பதிலாக, மே 31 தேதி வரை பயிற்சி மருத்துவம் செய்யும் மருத்துவ மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ .ஆர். சாந்தி ,தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் நலச்சங்கத்தின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் எம்.பொன்ராஜ், ஆரம்ப சுகாதாரநிலைய RCH ஒப்பந்த சுகாதார துப்புரவுப் பணியாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் என்.எஸ். செல்வராஜ் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.