380 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது !
380 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது !
மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கனவு ஆசிரியர் 2023 தெரிவானது மூன்று படிநிலைகளில் நடைபெற்றது.
இணையவழி MCQ (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர்களின் நேரடி செயல் விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் – இரண்டாம்நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு.
இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.

மேற்கண்டுள்ள மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 % க்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தெரிவு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
கனவு ஆசிரியர் விருது திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி- இடைமலைப்பட்டி புதூர் பள்ளியின் ஆசிரியை சு.உமா தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட கனவு ஆசிரியர் தேர்வின் மூன்று நிலைகளிலும் தேர்ச்சி பெற்று கனவு ஆசிரியர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாழ்த்துகள்…
இவர் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் கீழ் இயங்கி வரும் திருச்சி அஸ்ட்ரோ கிளப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்து விடுமுறை நாட்களிலும், திருச்சி விழா, திருச்சி புத்தகத் திருவிழா போன்ற நிகழ்வுகளிலும் பள்ளி மாணவர்களுக்கும்,பொது மக்களுக்கும் வானியல் விழிப்புணர்வு நிகழ்வுகளை கொண்டு செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.