எலெக்ஷன் ஜுரம்… திருச்சி கோர்ட்டையும் விட்டு வைக்கல….
சங்கத்தின் ஆவணங்கள் களவு போனதும்; களவு போன ஆவணங்களின் அடிப்படையில் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடுத்ததும்; வழக்கறிஞர்கள் மத்தியில்
எலெக்ஷன் ஜுரம்… திருச்சி கோர்ட்டையும் விட்டுவைக்கல….
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு மிக சமீபத்தில் தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பதவியேற்ற நிலையில், சற்றும் எதிர்பார்க்காத வகையில் சங்கத்தின் ஆவணங்கள் களவு போனதும்; களவு போன ஆவணங்களின் அடிப்படையில் தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடுத்ததும்; இந்த பின்னணியிலிருந்து கடந்த 6 ஆண்டுகளாக பொருளாளராக பதவியிலிருந்த வீரவடிவேல் ராஜினாமா செய்த விவகாரமும் வழக்கறிஞர்கள் மத்தியில் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 46-வது ஆண்டுவிழா வருகிற செப்டம்பர்- 8ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த பஞ்சாயத்தா? என வழக்கறிஞர்களிடையே நெருடலை உண்டாக்கியிருக்கிறது. திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டுவரும் திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன், திருச்சிராப்பள்ளி குற்றவியல் சங்கம், திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், சிட்டி பார் அசோசியேசன் என பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அதில், பாரம்பரியமான சங்கங்களுள் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கமும் ஒன்று.
செப்டம்பர்-8ல் நடைபெறவிருக்கும் ஆண்டு விழாவில், 58 வருடமாக வழக்கறிஞர் தொழில் செய்துவரும் மூத்த வழக்கறிஞர் ஸ்தனிஸ்லாஸ்சுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருப்பதாக அச்சங்கத்தின் நிர்வாகிகள் அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிகழ்வில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிர்மல்குமார், முரளி சங்கர், மாவட்ட நீதிபதி பாபு மற்றும் பார்கவுன்சில் ஆப் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் தலைவர் அமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற உள்ள நிலையில் நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு எப்படி அமையும்? திட்டமிட்டபடி விழா நடைபெறுமா? என்ற பரபபரப்பையும் பதட்டத்தையும் வழக்கறிஞர்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. நல்வாய்ப்பாக, நீதிமன்றத்தில் தேர்தலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள். என்னதான் பஞ்சாயத்து? வழக்கறிஞர்களிடம் விசாரித்தோம்.

திருச்சியில் குற்றவியல் வழக்கறிஞர்கள், உரிமையியல் வழக்கறிஞர்கள் சங்கம் என பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் செயல்படுகின்றன. பிரதானமாக திருச்சியில் பிராக்டிஸ் செய்யும் வழக்கறிஞர்கள் அதன் அருகாமையில் அமைந்துள்ள இலால்குடி, மணப்பாறை, புதுக்கோட்டை, துறையூர் போன்ற நீதிமன்றங்களில் வழக்குகளுக்காக ஆஜர் ஆவார்கள். இதுபோலத்தான் மற்ற ஊர் காரர்களும் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அவர்களின் வழக்குகளின் பொழுது, ஆஜர் ஆவார்கள். இதன் அடிப்படையில் ஒரே வழக்கறிஞர் ஒரே நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்திலும் உறுப்பினராக இருப்பார்.
உரிமையியல் வழக்கறிஞர் நீதிமன்றத்திலும் உறுப்பினராக இருப்பார். அதே போல இலால்குடி, துறையூர் போன்ற நீதிமன்றங்களில் செயல்படும் வழக்கறிஞர்கள் சங்கத்திலும் உறுப்பினர்களாக இருப்பார். தற்போதைய நடைமுறையின்படி, ஒரு வழக்கறிஞர் அவர் உறுப்பினராக இணைந்துள்ள அனைத்து சங்கங்களிலும் வாக்களிக்க உரிமை பெற்றவராக இருக்கிறார். இதனை மாற்றியமைத்து ஒரு வழக்கறிஞர் எத்தனை சங்கங்களில் வேண்டுமானாலும் உறுப்பினராக இருந்துவிட்டு போகட்டும் ஆனால், ஓட்டுரிமை மட்டும் அவரது விருப்பத்தின் அடிப்படையில் ஏதேனும் ஒரு சங்கத்தை மட்டுமே பிரதிநிதித்துவ படுத்துவதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மிக முக்கியமாக, சென்னை எழும்பூர் நீதிமன்றம் உள்ளிட்ட தனிச்சிறப்பான சில இடங்களில் வழக்கறிஞர்களிடையே சச்சரவுகள் இல்லா சுமுக நிலையை எட்டவே இந்த நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சங்கம் இயங்கிவரும் சூழலில், வெறும் 20-க்கும் குறைவான சங்கத் தேர்தல்களில்தான் இந்த ”ஒரு சங்கம் ஒரு ஓட்டு” நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்தப் பின்னணியிலிருந்துதான், இந்த ”ஒரு சங்கம் ஒரு ஓட்டு” என்ற விதிமுறையின்படி திருச்சி குற்றவியல் சங்கத் தேர்தலை நடத்தவில்லை ஆகவே, தேர்தலை ரத்து செய்யுங்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு தொடுத்திருக்கிறார். வெளிப்பார்வைக்கு நோக்கம் நல்லதுபோல தெரிந்தாலும், தேர்தல் தேதி அறிவித்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தலும் நடந்து முடிந்துவிட்ட நிலையில் வழக்கு போட்டதில் உள்நோக்கம் இருக்கிறது என்கிறார்கள்.

குற்றவியல் வழக்கறிஞர்கள் செயலர் வழக்கறிஞர் வெங்கட் அவர்களிடம் பேசினோம், ”குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் பங்கேற்று ஓட்டுப் போடுவீர்கள். தோல்வி அடைந்தவுடன் அந்த தேர்தலை எதிர்த்து வழக்கு போடுவது எந்த மாதிரியான அணுகுமுறை. நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். என்ற கண்டிப்புடன் சங்கத்திற்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த விசயத்தை பெருசு படுத்த வேண்டாம். அவர்கள்தான் யோசிக்காமல் செய்துவிட்டார்கள். அவர்களுக்குத்தான் சங்கடம்.” என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
வழக்கு தொடுத்த வழக்கறிஞர் கண்ணனிடம் பேசினோம், ”தேர்தலுக்கு முன்பாக இதே வழக்கை தொடுத்திருந்தால் கட்டாயம் வென்றிருப்போம். தேர்தலுக்கு பிறகு தொடுத்ததால் தோற்றுவிட்டது. வழக்கு தொடுக்கும்போதே தெரியும் டிஸ்மிஸ் ஆகிவிடும் என்று. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக வழக்கு தொடுக்க வேண்டியதாயிற்று. உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதனை ஸ்போர்ட்டிவாகத்தான் எடுத்துக் கொள்வேன்.” என்கிறார் பக்குவமாக. அதிகாரத்துக்கான போட்டியாக அல்லாமல், முதிர்ச்சியும் பக்குவமும் நிறைந்த ஆரோக்யமான போட்டியாக அமைந்துவிட்டால் சர்ச்சைகளுக்கு இடமில்லையே?
-வே.தினகரன்