அங்கன்வாடிக்கு மின் விசிறி – விளையாட்டு உபகரணங்களை வழங்கிய காக்கும் கரங்கள் அமைப்பு
திருச்சி, துவாக்குடியை அடுத்துள்ள வளவந்தான் கோட்டையில் உள்ள அங்கன்வாடிக்கு காக்கும் கரங்கள் சமூகத் தொண்டு நிறுவனம் சார்பில் மின் விசிறி – விளையாட்டு உபகாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி 11.06.2025 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காக்கும் கரங்கள் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் திருமதி திலகா தலைமை தாங்கினார். குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் செயலாளர் மகேந்திரபாபு வரவேற்புரையாற்றினார்.
காக்கும் கரங்கள் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் அங்கன்வாடிக்கு மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். இப் பொருள்களை அங்கன்வாடியின் ஆசிரியர் பாரதி பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் உரையாற்றிய பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்,“இம் மண்ணில் பிறக்கும் பிள்ளைகள் எல்லாம் நல்லவர்கள் ஆவதும், கெட்டவர்கள் ஆவதும் அன்னை வளர்ப்பிலே” என்று ஒரு திரைப்படப் பாடலில் குறிப்பிடப்படுகின்றது.
குழந்தைகளை பிஞ்சுப் பருவம் தொடங்கி, உயர்கல்விக் காலம் வரை பிள்ளைகளை நாம் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். தீய செயல்களில் அவர்கள் ஈடுபடாவண்ணம் அவர்களைப் பெற்றோர்களில் குறிப்பாக அன்னையர்கள் திருத்தவேண்டும். இந்த சமூகம் நல்லதொரு சமூகமாக உயர அன்னையர்கள் தங்களின் மழலைச் செல்வங்களைப் பேணி பாதுகாத்து வளர்க்கவேண்டும்” என்று உரையாற்றினார்.
இந்நிகழ்வில் காக்கும் கரங்கள் அமைப்பின் அறங்காவலர் திரு.நந்தக்குமார் பிள்ளைகளுக்குச் சிறுசேமிப்பின் அவசியத்தைச் சொல்லி வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அங்கன்வாடி ஆசிரியர் திருமதி பாரதி அவர்கள் நன்றி கூற நிகழ்வு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் அங்கன்வாடியில் உள்ள 20 குழந்தைகளின் தாய்மார்கள் வருகை தந்தனர். விழாவின் இறுதியில் அங்கன்வாடி சார்பில் அனைவருக்கும் சுவையான சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது.
— ஆதவன்