எல்ஃபின் வழக்கில் நீண்ட நாள் தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது !
எல்ஃபின் வழக்கில் நீண்ட நாள் தலைமறைவு குற்றவாளி அதிரடி கைது !
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்டு பல இடங்களில் கிளை நிறுவனங்களை தொடங்கி மோசடியில் ஈடுபட்ட எல்ஃபின் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்த குற்றவழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் பதிவான வழக்கில் தொடர்புடைய முக்கிய ஏஜெண்டான டி.இளங்கோவனை அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள், டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார். எல்ஃபின் வழக்கில் தொடர்புடைய முக்கிய தலைவர்களுள் ஒருவனாகவும் முக்கிய ஏஜெண்டாகவும் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த டி.இளங்கோவன் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்ஃபின் ராஜா மற்றும் அவரது துணை நிறுவன மோசடிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பதிவான 17 வழக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அந்த வழக்குகளை விசாரிப்பதற்கென்றே, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையில் சுமார் 20 போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையை தொடங்கியிருக்கிறார்கள்.
மேலும், R.M.W.C, ELFIN E.com.pvt Ltd..Sparrow Global Trade Trichy ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்து, அவர்களின் மிரட்டல் அல்லது சமரச பேச்சுக்கு உடன்பட்டு இதுவரை புகார் அளிக்காதவர்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், மன்னார்புரம், திருச்சிராப்பள்ளியில் புகார் அளிக்கலாம் என்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக, கவர்ச்சிகரமான திட்டங்களுக்கும் அதிக வட்டிக்கும் ஆசைப்பட்டு இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் பணத்தை இழந்து ஏமாறாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.
– அங்குசம் செய்திப்பிரிவு.