கட்சி பெயரை சொல்லி இனிமே ஜெயிக்கிறது இனி கஷ்டமாகும்’! – வெடிக்கும் வேலூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள்!
“வெளியில் தலை காட்ட முடியல “•••
ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல முடியல• அடுத்த தேர்தலுக்கு வார்டுக்குள்ள ஓட்டு கேட்டு போறதே சிரமமாகிடும் போலிருக்கு”- இப்படி புலம்புகிறவர்கள் வேறு யாரும் இல்ல •••
வேலூர் மாநகராட்சியில் இருக்கும் 4 மண்டல குழு தலைவர்களும் தான். இவர்களை இப்படி புலம்ப வைத்திருப்பவர் வேலூர் மாநகராட்சி மேயர் திமுகவைச் சேர்ந்த சுஜாதா!!
திமுக வசம் இருக்கும் வேலூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் 4 மண்டலங்களின் தலைவர்கள் என அனைத்தையும் திமுக- வே கைப்பற்றி வைத்திருக்கிறது
இருந்த போதும், அதிகாரத்திற்கு வந்த மூன்று ஆண்டுகளாகியும் மாநகராட்சியில் பெயர் சொல்லும் படியாக எந்த காரியமும் நடக்கவில்லை என ஆளும் கட்சி கவுன்சிலர்களே புலம்புகிறார்கள்•
மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லி திட்டங்களை செயல்படுத்தலாம் என்றால் மாமன்ற கூட்டத்தையே 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை தான் கூட்டுகிறாராம் மேயர் சுஜாதா •
இதையெல்லாம் ஆகப்பெரும் குற்றச்சாட்டாக அடுக்கும் மண்டல குழு தலைவர்கள்,
” மேயர் சுஜாதா தனது அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க விரும்பாததால் மாநகராட்சி நிர்வாகமே செயலிழந்து கிடக்கிறது” என்று ஆதங்கப்படுகிறார்கள் •
இதுகுறித்து பேசிய 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா, ” வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன• இதில், 15 வார்டுகளுக்கு ஒரு மண்டலம் என மொத்தம் 4 மண்டலங்கள் உள்ளன• இந்த 4 மண்டலங்களிலும் மண்டல குழு தலைவராக தி.மு.க-வை சேர்ந்தவர்களே இருக்கிறோம்.

பொதுவாக மாதம் ஒருமுறை மண்டல குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதில், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட 15 வார்டுகளின் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு தங்களது வார்டுக்கு தேவையான வசதிகள் குறித்தும், அடிப்படைத் தேவைகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் கோரிக்கைகளை முன் வைப்பார்கள். அதை பரிசீலித்து ஒரு வார்டுக்கு ரூ. 5 லட்சத்திற்கான பணிகளை செய்து முடிக்க மண்டல குழு கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி அதை செயல்படுத்தும் அதிகாரம் மண்டல குழு தலைவருக்கு உண்டு.
அதன்படி, கடந்த 2022-ல் ஒவ்வொரு மண்டலத்திலும் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால்,அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதையுமே செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. மண்டல குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாமன்ற கூட்டத்தில் வைத்து அங்கும் அது நிறைவேறினால் தான் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்ய அனுமதி வழங்கப்படும் என மேயர் தரப்பில் சொல்கிறார்கள். அதேசமயம், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு பணத்தைப் பட்டுவாடா செய்யாதாததால் அடுத்தடுத்த பணிகளை எடுத்து செய்ய யாரும் முன்வர மறுக்கிறார்கள்.
இதனால், அடுத்தடுத்த மண்டல கூட்டங்களை எங்களால் நடத்த முடியவில்லை. மாதம் ஒருமுறை மாமன்ற கூட்டத்தைக் கூட்டினால் அங்கு எங்களின் குறைகளை தெரிவிக்கலாம். ஆனால், அதற்கும் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறைதான் மாமன்ற கூட்டத்தையே கூட்டுகின்றனர். மேயரை பார்ப்பது குதிரை கொம்பாக உள்ளது. அப்படியே பார்த்தாலும் எங்கள் வார்டுகளின் பிரச்சனையை எடுத்துச் சொன்னால்,” ஆணையரைப் பார்த்து பேசுங்கள் ‘ என்று சொல்லி எங்களை அலை கழிக்கிறார் மேயர்.
இதனால், எங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கவுன்சிலர்கள் எங்களிடம் வந்து குறைகளை சொல்கிறார்கள். பிரச்சனையே ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தானே வைத்திருக்க வேண்டும் என மேயர் சுஜாதா நினைப்பது தான்.
அந்த அளவுக்கு சுயமாக சிந்திக்க விடாமல் வெளியில் இருந்து சிலர் அவரை இயக்குகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மண்டல குழு தலைவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க தயங்குகிறார் மேயர். இதனால், எங்களை மண்டல குழு கூட்டத்தையும் நடத்த விடாமல் தடுக்கிறார்.

இப்படி மேயரின் நிர்வாக திறமையின்மையால் ஆட்சிக்கு தான் அவப்பெயர் உண்டாகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் கட்சி பெயரை சொல்லி திமுக-வினர் வெற்றி பெறுவது கஷ்டமான ஒன்றாகிவிடும். அந்தளவுக்கு, தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்ற நிலையை மேயர் தரப்பு உருவாக்கி விட்டது ” என கொட்டி தீர்த்தார்.
மேயர் சுஜாதாவிடம் இதற்கான விளக்கத்தை கேட்டபோது, இங்கு யாருடைய அதிகாரமும் பறிக்கப்படவில்லை. மண்டல குழு கூட்டத்தை அதன் தலைவர்கள்தான் கூட்ட வேண்டும். மண்டல குழு கூட்டத்தை கூட்டச் சொல்லி நான் பலமுறை அறிவுறுத்தியும் அதை மண்டல குழு தலைவர்கள் அதை செய்யாமல் உள்ளனர். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? மண்டல குழு தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தை வழங்க வேண்டிய ஆணையருக்கும் இது தெரியும்’ என்றார்.
கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் செயல்படுகிறவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்டம் கட்டும் பொறுப்பில் இருப்பவர் திமுக பொது செயலாளர் துரைமுருகன். அவரது சொந்த மாவட்டமான வேலூரில் நடக்கும் இந்த சமாசாரங்கள் எல்லாம் அவருக்கு தெரியாதா… அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா…?