பிரபல சேலம் ரவுடி வெட்டி கொலை! மனைவி கண்முன்னே நடந்த பயங்கரம் !
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். பிரபல ரவுடியான இவர் மீது, சேலம் மாவட்டத்தில், பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவனது மனைவியுடன் திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றாகள்
இவர்கள் சென்ற கார், ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு சென்று கொண்டு இருந்தது.
அப்போது அவர்களின் காரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் காரை வழி மறித்து நிறுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் ஜானை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். பின்னர் அந்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ஆதிராவை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டார்.
பழிக்கு, பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15 – க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது. ஜானை கொலை செய்து விட்டு சேலம் நோக்கி செல்லும் போது சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளி என்ற இடத்தில் காவல் துறையினர் 4 பேரை காலில் சுட்டுப் பிடித்தனர்.
குற்றவாளிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கும் முயன்ற போது காவல் ஆய்வாளர் ரவி மற்றும் முதல் நிலை காவலர் யோகராஜ் ஆகிய இருவருக்கும் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டதில் 4″ரவுடிகள் தற்போது மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
— மணிகண்டன்.